அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும்
கண்ணதாசன் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலை நான் சிறு வயதில் படித்திருக்கிறேன். அதைத் திரும்பப் படிக்கும் ஒரு வாய்ப்பு பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர் மூலம் வாய்த்தது. சிறு வயதில் படித்தபோது உண்டான ஒரு பிரமிப்பு இந்த முறை உண்டாக வில்லை. மாற்றாகப் பல கேள்விகள் எழுந்தன. பல பகுதிகளைப் படிக்கும்போது, தன்னுடைய சுய புராணத்தைப் பாடுவதற்கும், யாரோ சிலருடைய வில்லுக்கு அம்பாக மாறி யார் மீதோ கணை தொடுப்பதற்காகவுமே அவர் இதை எழுதியிருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
இந்த நூலைப் படிக்கும்போது ஏற்பட்ட எல்லா நெருடல்களையும் இங்கு எழுத முடியாது என்றாலும், சில கருத்துக்களுக்கான எதிர் வினைகளை இங்கு வைத்தே ஆக வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனெனில் ‘கண்ணதாசனே சொல்லி இருக்கிறார்’ என்ற பரிந்துரையைக் கைக்கொண்டு இணையத்தில் சிலர் இந்து மத வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தான் விளம்பர மாடலாக நடித்த சாக்லெட்டில் புழு இருந்ததைப் பற்றி எப்படி ஒரு இந்தி நடிகருக்குக் கவலை இல்லையோ, அப்படியே தான் அவிழ்த்து விட்ட புழு(ளுகு)களைப் பற்றியும் கண்ணதாசன் கவலைப்படவில்லை. அங்கேயும் பணத்துக்கு விளம்பர மாடல். இங்கேயும் பணத்துக்காக இலக்கியச் சேவை!
எனவே அந்த நூலின் சில பகுதிகள் மீதான விமர்சனம் மட்டும் இங்கே.
எதிர்வினை-1-முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு:
கண்ணதாசன், தனது நூலின் இரண்டாம் பாகத்தில் , எட்டாவது தலைப்பில் ‘வள்ளுவர் ஓர் இந்து’ என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுதியிருக்கிறார்.
வள்ளுவர், திருக்குறள் நூலை அரங்கேற்ற இயலாமல் முட்டுக்கட்டைகள் பல போடப்பட்டன என்பதும், அவர் சாதி அடிப்படையில் பல நிந்தனைகளுக்கு ஆளானார் என்றும் , அவர் சாதி/வருண பேதங்களை எதிர்த்தவர் என்பதும் நமக்குக் கிடைக்கின்ற செய்திகள். அவரை அன்று வளர விடாமல் செய்த கூட்டம், அவர் எழுதிய நூல் உலகப் புகழ் பெற்ற பின்னால், அவருக்குச் சொந்தம் கொண்டாட எந்தவித வெட்கமும் இல்லாமல் திரிகிறது. பாரதி வாழ்ந்த காலத்தில் வசை பாடிய கும்பல், செத்த பின்பு அவரைத் தங்கள் ஆள் என்று சொந்தம் கொண்டாடியதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
வள்ளுவர் வாழ்ந்த காலத்தையும், அவரது நூலில் இருந்த கருத்துக்களையும் வைத்து அவர் சமண மதத்தின் மீது பற்றுடையவர் என்று ஏற்கனவே நிரூபித்தாகி விட்டது. இன்றைக்கு சமண மதம் அதிகாரத்துடன் இல்லை என்பதாலும், சமண மதத்தை, இந்து மதம் தனக்குள் உள் வாங்கிக் கொண்டது என்பதாலும், சமண மத நூல்கள் அனைத்தும் இந்து மத நூல்களே என்று நிறுவி விடத் துடிக்கிறது ஒரு கூட்டம். விட்டால் சிலப்பதிகாரம், மணிமேகலை கூட இந்து மத நூல்கள்தான் என்றுகூட நாளைக் கதை விடக்கூடும். இந்த மாதிரி வேலைக்குக் கண்ணதாசன் துணைப் போவதுதான் வேடிக்கை.
வள்ளுவன் இந்து என்பதை நிரூபிப்பதற்காக கண்ணதாசன் திருக்குறளில் இருந்து ‘இறைவன்’, ‘கடவுள்’, ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ போன்ற சில வார்த்தைகளை எடுத்துக் கொண்டு விளையாடுகிறார்.
இது மட்டும் அல்லாமல், தனது நூலின் 3-ஆம் பகுதியில், (அத்தியாயம்-9, பக்கம்-64) “மகா நிர்வாணத்தை, இந்துத் தத்துவங்களில் இருந்தே பவுத்தம் எடுத்துக் கொண்டது” என்றொரு புருடா விடுகிறார்.
நாம் இங்கு உணர வேண்டியது – இந்து மதம் என்றொரு தனி மதம் இருக்கவேயில்லை. மக்கள் தங்கள் புரிதலுக்கும், பண்பாட்டுக்கும் இயற்கைச் சூழலுக்கும் தக்கவாறு பல்வேறு நம்பிக்கைகளை, வழிபாட்டு முறைகளைக் கைக்கொண்டிருந்தனர். நீத்தாரை வழிபடுதல், இயற்கையை வழிபடுதல் பெரிதும் பின்பற்றப்பட்டன.
பிற்காலத்தில் தன்னை உணர்ந்த (உணர்ந்ததாகச் சொல்லிக்கொண்ட) சிலர் இங்கும் அங்குமாய்ச் சிதறிக்கிடந்த பல நம்பிக்கைகளை, வழிமுறைகளை ஒன்று சேர்த்து, அதனை ஒரு மதமாகக் கட்டமைத்தனர் என்பதே உண்மை.
இந்தக் கட்டமைப்புக்கான அவசியம் ஏன் ஏற்பட்டது? அந்நியர்களின் படையெடுப்பால் மக்கள் தங்கள் மதத்தை மாற்றாதிருக்கும் பொருட்டும், அந்நியர்களுக்கு எதிராக மக்களை அணி சேர்க்கும் நோக்கத்துடனும் இது ஒரு மதமாகக் கட்டமைக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் புத்தம், சமணம் போன்று திரும்பவும் புதிய மதங்கள் இங்கு தோன்றுவதைத் தடுப்பதும் இதற்கான அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும்.
அவ்வாறு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த கோட்பாடுகளை ஒன்று சேர்த்து உருவாக்கும்போது, ஏற்கனவே உருவாகியிருந்த மாற்றுக் கோட்பாடுகளும் உள்வாங்கிக் கொள்ளப்பட்டன. இந்த உள்வாங்கும் (கபளீகரம் செய்யும்) தன்மையால்தான், இங்கே உருவான எல்லா மதங்களும் காணாமல் போயின.
எதிரிக்குப் பெண்ணைக் கட்டிவைத்து உறவாக்கிக் கொள்வது காலகாலமாய் , இந்தியாவில் இருந்த அரசர்களிடையே நடந்து வந்த தந்திரம்தான். அந்த வழிமுறை இந்து மதக் கட்டமைப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.
இந்து மதமானது சமண, புத்த மதங்களை உள்வாங்கும்போது, அதில் பயன்பாட்டில் இருந்த வார்த்தைகள், கடவுள் பெயர்கள் ஆகியவையும் உள்வாங்கப்பட்டன. சிவனின் பெயர்களாகச் சொல்லப்படும் பல வார்த்தைகள் ஏற்கனவே சமண மதத்தில் பயன்பாட்டில் இருந்தவையே. (எனக்கும் ஆள் பலம், படை பலம் இருந்தால், சிவனையே சமண சமயக்கடவுள் என்றொரு நூல் எழுதலாம் என்றொரு ஐடியா இருக்கிறது… )
IT துறையில் இருப்பவர்களுக்குத் தெரிந்த விஷயம் ஒன்று. COMPAQ என்றொரு வன்பொருள் நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தை HP என்ற மற்ற நிறுவனம் வாங்கித் தனக்குள் சேர்த்துக் கொண்டது. அதுவரை COMPAQ என்ற பெயரில் வந்து கொண்டிருந்த பொருட்கள் எல்லாம் HP என்ற பெயரில் வர ஆரம்பித்தன். COMPAQ PROLIANT என்ற பெயரில் SERVER-கள் வந்து கொண்டிருந்தன. அவை பின்னால் HP PROLIANT என்ற பெயரில் வர ஆரம்பித்தன.
ஒரு 500 வருடம் கழித்து, PROLIANT என்ற வார்த்தையை வைத்து , அந்தப் பொருள் HP-க்குச் சொந்தமானது என்றோ, அதனை HP-தான் உருவாக்கியது என்றோ ஏதோ ஒரு கூட்டம் சொன்னால் அது எவ்வளவு பெரிய கூமுட்டைத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
இந்தக் காரியத்தை, சினிமாவில் பாட்டெழுதியதால் புகழ் பெற்ற கண்ணதாசன், தனக்கு சம்பந்தமில்லாத இன்னொரு துறைக்குள் புகுந்து செய்கிறார். இல்லை –இல்லை அவர் யாரோ ஒருவருடைய தூண்டுதலினால் அந்தக் காரியத்தைச் செய்கிறார். யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவருடைய நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரையைப் படித்தால் விளங்கும் .
கேரளாவில் கிறித்துவர்கள் கடவுளை ஈஸ்வரன் என்றே அழைக்கிறார்கள். 90% சர்ச்சுகளில், கோவில்களில் இருப்பது போலவே கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. மேரி மாதா அல்லது ஏசுவின் சிலைக்கு சிலர் விளக்கேற்றியும் வழிபடுகிறார்கள். (எர்ணாகுளத்தில் கலூர் என்றொரு இடத்தில் செயின்ட் ஆண்டனி சர்ச் உள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை அன்று சென்று பார்த்தால் தெரியும்).
ஒருமுறை என் மலையாள நண்பர் ஒருவர் ‘SPIRITUAL’ என்ற தலைப்பில் ஒரு ஆடியோ சி.டி கொண்டுவந்தார். அதனைக்கேட்கும்போது அது இந்து மதச் சொற்பொழிவு போன்றே தோன்றியது. ‘ஈஸ்வரனின்’ கருணையைப் பற்றி அடிக்கடி சொன்னார்கள். இறுதியில் ‘ஆமென்’ என்று சொல்லி முடிந்தபோதுதான், அது கிறித்துவ மதச் சொற்பொழிவு என்றே கண்டுபிடிக்க முடிந்தது. ‘ஈஸ்வரன்’ என்ற வார்த்தையைக் கொண்டு, கண்ணதாசனின் லாஜிக் படி அதை இந்து மதம் என்று நாம் கூற முடியுமா?
தமிழ், பாலி போன்ற மொழிகளில் இருந்து ஏராளமான சொற்களை உள்வாங்கி ‘உருவாக்கப்பட்ட’ சமற்கிருதம், பின்னாளில் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற காரணத்தால், மற்ற மொழிகளுக்கு மூலமொழி என்று எவ்வாறு புனைந்து உரைக்கப்பட்டதோ, அதற்கு என்ன நோக்கமோ அதே முறையில்தான் வள்ளுவர் ஓர் இந்து என்ற புனைகதையும், அதன் நோக்கமும் ஆகும்.
தமிழ்நாட்டின் சாபக்கேடு என்னவெனில், தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல, இங்கு எழுதத் தெரிந்தவனெல்லாம் ஆராய்ச்சியாளன் ஆகி விடுகிறான். ஏற்கனவே இந்து மதத்தில் நிறைய அழுகிப்போய் நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சரி செய்வதுதான் உண்மையான தொண்டாக இருக்க முடியும். திருக்குறளைப் படித்து அதில் சொல்லப்பட்ட அறநெறிகளைப் பயன்பாட்டில் கொண்டு வருவதன்மூலம் அதனைச் சாதிக்க முடியும். அதனை விட்டுவிட்டு, அந்த நாற்றத்தைப் புனுகு பூசி மறைத்துக் கொண்டு, வெட்டியாய் வள்ளுவனுக்கு மதச் சாயம் பூசுவது தவறு.
வள்ளுவன், புத்தன், ஏசு, காந்தி போன்றவர்களின் பணியைப் புரிந்து கொள்வதும், மனித இனத்தின் மீது அவர்கள் கொண்ட அன்பை உணர்ந்து போற்றுவதுமே நலம் தரும். மனித நேயம் கொண்டு, மனிதர்களின் கடைத்தேற்றத்துக்காக இயங்கிய மாமனிதர்களை மதத்துக்குள் இழுப்பது சூரியனைக் குடத்துக்குள் அடக்க முயற்சிப்பது போல வீண் வேலை ஆகும்.
[தொடரும்]