நூல்கள் நுகர்வோம் -8

முந்தைய   பதிவுகளுக்கான சுட்டிகள்:

 நூல்கள் நுகர்வோம்-1  நூல்கள் நுகர்வோம்-2  நூல்கள் நுகர்வோம்-3
 நூல்கள் நுகர்வோம்-4  நூல்கள் நுகர்வோம்-5  நூல்கள் நுகர்வோம்-6
 நூல்கள் நுகர்வோம்-7
உடல் உழைப்பைக் கேவலமாக நினைக்கும் மன நிலையை முந்தைய பதிவில்   பார்த்தோம். இந்த மன நிலையை ஏற்படுத்துவதில் பெற்றோர்தான் முன் நிற்கிறார்கள்.  அவர்கள் சொல்வது என்ன?  “நான் படற கஷ்டம் நீ படக்கூடாது”
பள்ளியில் ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? “நல்ல   மார்க் வாங்கலைன்னா ஆடு மேய்க்கப் போகணும்”. எந்த   மிருகத்தை மேய்ப்பது என்பது ஊர் ஊருக்கு / ஆசிரியரைப் பொறுத்து மாறும். சில ஊர்களில் கழுதை, சில ஊர்களில் எருமை, சில ஊர்களில் பன்றி.
மொத்தத்தில் எல்லா அறிவுரைகளுக்கும்   பொருள் என்னவென்றால்,
உடல் உழைப்பு கேவலமானது,
படிப்பதன் மூலமாதைத் தவிர்க்கலாம்.  
வேர்வை வெளியே வராமல் இருப்பதுதான்   நாகரீகம்.
இந்த மனநிலை இருப்பதனால்தான், காலையில் பனியன், ஜட்டி   நனைய இரண்டு   கிலோமீட்டர் வாக்கிங் / ஜாக்கிங் போவது இவர்களுக்கு நாகரீகமாகத் தெரிகிறது, அதே   சமயத்தில் வீட்டில்  இருந்து 300 அடி   தூரத்தில் இருக்கும் கடைக்கு ஹோண்டா சிட்டி காரில் ஏசி போட்டுக்கொண்டு சென்று, நடுச் சாலையில் பார்க்கிங் செய்து டிராபிக் ஜாம் ஆக்கி, ஒற்றை சிகரெட் வாங்கிக்கொண்டு வருவார்கள். ஏனெனில்   நடந்து போனால் அது கேவலம்.
வயதுப் பையன், மதியம்   ஒரு மணிக்கு உச்சி வெய்யிலில் வேர்க்க   விறுவிறுக்க மைதானத்தில்   கிரிக்கெட் விளையாடுவான். அதே பையனை, ‘கண்ணா, எண்ணெய்   தீந்துடுச்சு, மொக்குக் கடைல போய் கொஞ்சம் வாங்கிட்டு வாடா”  என்று   அனுப்பிப் பாருங்கள். “போம்மா, ஒரே   வெய்யிலா இருக்கு, நம்மாள ஆகாது”  என்பான்.
நன்றாகப் பாருங்கள், ஒரே சூழ்நிலைதான். வாக்கிங்   / ஜாக்கிங் என்ற பேரில்  செய்தால் அது   நாகரீகம். அதே செயலை, ஒரு வேலையாக / வேலைக்காக செய்வதென்றால் அது அசிங்கம்.
நான்   ஏதோ கல்விக்கு எதிரானவனோ, எல்லாரையும் படிப்பதை விட்டுவிட்டுக் கோவணம் கட்டிக்கொண்டு (இப்பொது எல்லாம் பெர்முடாஸ்தான்)   ‘மண்ணைக் கொத்துங்கடா’ என்று சொல்கிற பழமைவாதியோ இல்லை. படிப்பது என்பது வேறு. அதை அறிவுக்காக செய்கிறோம். உழைப்பு என்பது வேறு.  இரண்டையும்   குழப்பிக்கொண்டு, ‘வொயிட்காலர் வேல கெடச்சாத்தான் போவேன், இல்லைன்னா   உக்காந்து கெடப்பேன்’  என்று   உருப்படாமல் போகிற  இளைஞர்களைப்   பற்றித்தான் கவலைப் படுகிறேன்.
இன்னும்    ஆழமாகத்   தோண்டிப் பார்த்தால் (சமுதாயத்துல   இருக்கும் எந்தப் பிரச்சினையத் தோண்டினாலும்)   நாறிக்கொண்டு   இருக்கும் ‘சாதி’ப் பிணம்தான் வெளியே வருகிறது.
வெளிப்படையாகச் சொன்னால்.   இப்போது எல்லோருக்கும் அவாளாக மாற ஆசை. முன்பு  இது குறைவாக இருந்தது. இப்போது அதிகமாக ஆகிவிட்டது.   அவாள் என்ன எல்லாம் செய்கிறார்களோ   அது எல்லாம் நாகரீகம், அதைக் காப்பி செய்தால்தான் நாமும் “மேலே “ வந்ததாக அர்த்தம் என்று நினைக்கிறார்கள். (அவாளுக்கு, அமெரிக்காக்   காரன் என்ன செயகிறானோ அவை எல்லாம் நாகரீகம்)
வெள்ளையாக இருந்தால் நாகரீகம்;  ஆங்கிலம்   கலந்து பேசுவதுதான் நாகரீகம்; வேர்வை   வராமல் இருந்தால் நாகரீகம்; காரில் போனால்   நாகரீகம்; வெளிநாடு போனால்   நாகரீகம்; கல்யாணத்தில் பந்தியில் 16 வகையான உணவுகளை வைத்துத் தின்ன   முடியாமல் கொண்டுபோய்க்   குப்பையில் கொட்டினால்   நாகரீகம்,…
கறுப்பாக இருந்தால் அசிங்கம்;  அரசுப் பள்ளியில்   படித்தால் அசிங்கம்; கம்பு, சோளம், ராகி   மாதிரியான சிறு   தானியங்கள் தின்றால் அசிங்கம்; வேர்த்தால் அசிங்கம்; மழையில் நனைந்தால்   அசிங்கம்; நடந்து போனால்   அசிங்கம்; மண் காலில்   பட்டால் அசிங்கம்; ‘எங்க   அப்பா விவசாயி’ என்று   சொன்னால் அசிங்கம்; சோற்றை விரயம் செய்யாமல் முழுதாகச் சாப்பிட்டால் அசிங்கம் (தரித்திரம் என்று நினைப்பார்களாம்); ‘சோறு’ என்று சொன்னால் அசிங்கம் (‘சாதம்’ என்று   நாகரீகமாகச் சொல்ல வேண்டும்!);……..
சமூகத்தின் அடித்தட்டில் பிறந்து, படித்து முன்னேறிய 99% பேர்   என்ன செய்கிறார்கள்? தங்களின் சொந்த பந்தங்களில்  இருந்து பிய்த்துக்   கொண்டு, முன்னேறிய வகுப்புகளுடன் போய்   ஒட்டிக்கொள்கிறார்கள்.   திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.   தான் இந்த (தாழ்த்தப்பட்ட) சாதியில் பிறந்தவன்    என்னும் கறையை எப்படியாவது வெட்டி எறிந்து விடவேண்டும் என்று நினைத்து, இன்னும் பழைய   நிலையிலயே இருக்கும் தன்னுடைய மற்ற உறவுகளை   ஒண்டக்கூட விடுவதில்லை.   எவ்வளவு தூரம் தள்ளிப்போக முடியுமோ   அவ்வளவு தூரம் தள்ளிப் போய்விடுகிறார்கள்.   வாய்ப்புக் கிடைத்தால், உயர்சாதிப்   பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சாதி   மாறிவிடுகிறார்கள்!
“விதிக்கு   விதி”  என்ற சிறுகதைத்   தொகுப்பைப் பற்றி போன பதிவில் பார்த்தோம்.   மேலே சொன்ன   சிச்சுவேஷன் தொடர்பாக அதில் ஒரு கதை, “ஒதுக்கீடு” என்ற தலைப்பில் இருக்கிறது.
கதைச்   சுருக்கம்:
ஒரு   தாழ்த்தப்பட்ட சாதி -ஏழைப் பையன், கஷ்டப்பட்டு   உழைத்துப்   படித்து, முன்னுக்கு   வந்தவன். பொறியியல் தேறி, நல்ல சம்பளத்தோடு   வேலையும் கிடைக்கிறது.   அவனைப் பற்றி  நன்றாகத் தெரிந்த   உயர்சாதிக்காரர் ஒருவர் இருக்கிறார். பரந்த மனசுக்காரர்.   சாதி-சமய பேதம் பாராட்டாத ஆள். அந்தப்   பையனுடைய சின்ன வயதில்   இருந்தே அவனுக்கு ஏறக்குறைய ஒரு வழிகாட்டியாக அவர்   செயல்படுகிறார்.   அவருக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அந்தப்   பையனின்   நேர்மை , உழைப்பைப் பார்த்துவிட்டு, தன் பெண்ணை ஏன் அவனுக்கே மணம் செய்து வைக்கக் கூடாது என்று யோசிக்கிறார்.   அந்த விருப்பத்தை அவனிடம் சொல்கிறார்.   அப்போது அந்தப் பையன்   சொல்கிற வசனத்தைக் கீழே தருகிறேன்.
ரொம்ப நன்றி சார். நீங்க   என் மேல் வைத்திருக்கும் அன்பு, மதிப்பு   எல்லாவற்றிற்கும் நன்றி சார்.   ஆனா….
உங்க அன்பு பல விஷயங்களை உங்க கண்ல   இருந்து மறைச்சிடுச்சு சார்.
நீங்க மொத்தமா முன்னேறிட்ட சமூகம். நீங்க   சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசலாம். நாங்க ரொம்ப பின்னடைஞ்ச சமூகம் சார். சாதிங்கற   விஷயம்தான் எங்களுக்கு   மேலே வர்றதுக்கான ஒரே ஐடன்டி.
உங்க பொண்ணுக்கு உங்க சமூகத்துல   இருந்தே இஞ்சினியர் மாப்பிள்ளை கிடைப்பான். ஆனா   என்னை மாதிரி சமூகத்துல பிறந்து, சாதி   ஒதுக்கீட்டுல இடம் வாங்கி படிப்பு முடிச்சதும், சாதி   ஒழிக்கறேன் பேர்வழின்னு முன்னேறுன சமூகத்துல பொண்ணு எடுத்துக்கிட்டு   ஒதுங்கிட்டா, எங்க   சமூகத்துப் பொண்ணுங்களுக்கு எப்போ சார்   இஞ்சினியர், டாக்டர்   மாப்பிள்ளைங்க கெடைப்பாங்க?”
இதே கருத்தைத் தொடுகின்ற   இன்னொரு சிறுகதை இருக்கிறது. இந்தக் கதையை எழுதியவர்   சந்திரகாந்தன் என்ற எழுத்தாளர்.
இந்தக்   கதை , ‘சப்தக் குழல்’  என்ற   சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது. கதையோட பெயரும், தொகுப்போட   பெயரும் ஒன்றுதான். இந்தத் தொகுப்பில் மொத்தம் ஒன்பது கதைகள் இருக்கின்றன. அதில்   ஆறாவது கதையைப் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
வட்டன்   என்ற பெயரில் ஒரு தலித். சப்தக்குழல் என்ற ஒரு  இசைக்கருவியை   வாசிப்பதில்  கெட்டிக்காரர்.   இவரோட வாசிப்பில், புதிதாக ஊருக்குள்   வந்த மருதநாயகம் என்ற ஒரு   உயர்சாதிக்காரர்க்குக் காதல் வருகிறது. இரண்டு பேரும்   நண்பர்களாகிறார்கள்.
மருதநாயகம்   கொடுத்த அறிவுரையால் , வட்டன்   தன் மகனைப் படிக்க வைக்கிறார்,  மகன் உதவிப்   பேராசிரியர் ஆகி விடுகிறான்.
உதவிப் பேராசிரியர் ஆன   கையோடு தன் ‘கருப்பன்’ –என்ற பெயரை , கே.அப்பன்    என்று மாற்றிக் கொள்கிறான். படித்த ஒரு அய்யராத்துப் பெண்ணைத் திருமணம்  செய்துகொண்டு, ஊரில் இருந்தும், தன்னுடைய உறவுகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்கிறான்.
தான்   ஒதுங்கியது மட்டும்   இல்லாமல், தன்னுடைய தந்தையும் ஒதுங்கிக் கொள்ல வேண்டும்   என்று கட்டாயப்படுத்துகிறான்.   முக்கியமாக, வட்டன், தனக்கு   விருப்பமான அந்த சப்தக்குழலை  எடுத்து வாசிக்கக் கூடாது என்று தடை போட்டு வைக்கிறான்.   அவனைப் பொறுத்தவரை   அதை வாசிப்பது என்பது அவமானம்,   இழிவுக்கு அடையாளம்.
இந்த   சூழ்நிலையில், மருத   நாயகம், தனது இறுதி   ஊர்வலத்தில், வட்டனுடைய சப்தக்குழல் கேட்க வேண்டும் என்று வட்டனிடம் ஒரு சத்தியம் வாங்கி  வைக்கிறார்.
மருத   நாயகம் செத்துப் போகிறார், இறுதி   ஊர்வலத்தில் வாசிப்பதா இல்ல மகனுக்கு பயந்து பேசாமல் இருப்பதா என்ற மனக்குழப்பத்தில் வட்டன்   கஷ்டப்படுகிறார்.
கடைசியில் வாசிப்பது   என்று முடிவு செய்து, தன்னுடைய மற்ற உறவினர்களோடு சேர்ந்துகொண்டு   வாசிக்க ஆரம்பிக்கும்போது, மகன்   வந்து தடுக்கிறான்.   அப்போது அவனை சமாதானப் படுத்துகிற இன்னொரு இளைஞன் (மருதநாயகத்தின்   உறவினன்) சொல்கிற வசனத்தைப் பாருங்கள்.
உங்க அப்பா வாசிக்கறத மட்டும்   நிறுத்தணுனு நெனைக்கற   நீங்க, உங்களோட மற்ற உறவினர்களைத்   தடுக்கலியே. அது ஏன்?
நீங்க மட்டும் இல்லை , உங்கள   மாதிரி பலபேர், படிப்பைக் கொண்டோ, பணத்தைக்   கொண்டோ மேல் வந்த பின்பு, தன்னையும்   தன் குடும்பத்தச் சேந்தவங்களயும்   மட்டும் அடிமைத்தனம், இழிவு   இதியாதிகள்ள இருந்து விடுவிச்சுட்டாப் போதும்னு   நெனைக்கறாங்க.
இன்னும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அதே   சகதியில் உழன்று   கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பற்றி அவங்க கவலைப் படுறதே இல்லை.   அவங்க மட்டும் பிறரோடு சமமா உட்கார்ந்துட்டாப் போதும், மேல்   ஜாதிக்காரங்க மத்தியில அந்தஸ்தோடு   உலவி வந்திட்டாப் போதும்னு நெனைக்கறாங்க.
தங்களைச் சார்ந்தவங்களை விட்டு   விலகிப் போகத்தான் விரும்புறாங்க.   ஏதோ இவங்களோடு தங்களுக்குச் சம்பந்தமே இல்லைனு காட்டிக்க முயற்சி   பண்றாங்க. தன் பழமைய   மறந்துட்ட மாதிரி, அத   நினைவூட்டவே விரும்பாத மாதிரி நடந்துக்கறாங்க.
அப்போது   கே.அப்பன் , “அப்போ இந்தத் தொழில் இழிவு இல்லைன்னு   சொல்ல முடியுமா” என்று கேட்கிறான். அதற்கு பதில் சொல்கிறான் அடுத்தவன்.
தொழில்ல   எது இழிவு? அப்படீன்னா   உழைப்பே இழிவா? உடல்   உழைப்பு இழிவுன்னு கருதிய ஒரு காலகட்டத்தின் கருத்தோட்டம் அது. உழைக்காமல்   உட்கார்ந்து சாப்பிடுவதே   உன்னதம் என்று கருதப்பட்ட காலத்தின் கண்ணோட்டம் அது.
இப்படியே   நீளமாகப் போகிறது, வசனம்.
முழுமையாகப் புரிந்துகொள்ள, கதையைப் படித்தால்தான்   நன்றாக இருக்கும்.   தமிழ்நாட்டில் இருக்கும் நூலகங்களில் இந்தப்   புத்தகம் கிடைக்கும். இதே தொகுப்பில் இருக்கும் மற்ற கதைகளையும் படியுங்கள்.
தலைப்பு சப்தக்குழல்
எழுதியவர் சந்திரகாந்தன்
பதிப்பகம் நியூ     செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
உரிமை ஆசிரியர்
முதல்     பதிப்பு ஆகஸ்ட்-1994
ISBN 81-234-0284-8
விலை 22/-     (இருபத்து இரண்டு)
அணிந்துரை இல்லை
கிடைக்கும்     இடம் http://www.noolulagam.com/product/?pid=1692

-உழைப்பைப் பற்றி, இதே   தொகுப்பில் இன்னொரு கதை இருக்கிறது, அதனை அடுத்த பதிவில் பார்ப்போம்.

[தொடரும்]

-துடிமன்னன்

Tagged: ,

One thought on “நூல்கள் நுகர்வோம் -8

  1. […] நூல்கள்     நுகர்வோம்-8 […]

Leave a comment