நூல்கள் நுகர்வோம் -9

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

நூல்கள்     நுகர்வோம்-1 நூல்கள்     நுகர்வோம்-2 நூல்கள்     நுகர்வோம்-3
நூல்கள்     நுகர்வோம்-4 நூல்கள்     நுகர்வோம்-5 நூல்கள்     நுகர்வோம்-6
நூல்கள்     நுகர்வோம்-7 நூல்கள்     நுகர்வோம்-8
சென்ற பகுதியில் உழைப்பைப் பற்றி, ‘சப்தக் குழல்’  என்ற   சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் இன்னொரு கதை பற்றிச் சொல்லி இருந்தேன்.
‘மண்’  என்ற   தலைப்பில் இருக்கும் ஏழாவது கதைதான் அது.
ஒரு   வயது முதிர்ந்த ஏழைக் குயவர். மண் சட்டி செய்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.  பிளாஸ்டிக் வந்து பிழைப்பைக்   கெடுத்தபின்னாலும் வேறு வழியில்லாமல், தொழிலைத்   தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்.
ஒரு   நாள் , வண்டி நிறைய மண் சட்டிகளைப் போட்டுக்கொண்டு ஊர் ஊராகப் போய் ஒன்றும் விற்காமல்   நொந்து கிடக்கிறார்.   அப்போது ஒரு திரைப்படப் படப்பிடிப்பு   நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாக்காரன் ஒருவன் , இவரிடம் வந்து , சண்டைக்காட்சியில் உடைப்பதற்காக   எல்லாப் பானைகளையும் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறான்.
பெரியவர்   முடியாது என்று   சொல்லி விடுகிறார். கூட இருக்கும் பேரன் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.
ஏன் என்று கேட்கிறான் சினிமாக்காரன். இப்போது வசனத்தைப் பாருங்கள்.
“நீங்க   பானை சட்டிய உடைக்கறதுக்காகக் கேக்கறீங்க”  என்கிறார்   பெரியவர்.
“என்னைக்குனாலும்   உடையப்போறதுதானே?” என்கிறான்   சினிமாக் காரன்.
“மனுஷங்கூடச்   சாகப் போறவன் தான், அதுக்காகக் கொல்லுவமா? “ – பெரியவர்.
“கொள்ளி   வெக்கறதுக்கு நீங்க விக்கறது இல்லையா?” – சினிமாக்   காரன்.
“யாரும்   ஒரு வண்டிக் குடத்தை கொள்ளி ஒடைக்கறதில்லீங்க” என்று சொல்கிற பெரியவரை விநோத ஜந்து மாதிரிப் பார்த்துவிட்டுப்   போகிறார்கள்   சினிமாக்காரர்கள்.
கடைசியில் பானைகள் விற்காமல் , வண்டியைத் திருப்பிக்கொண்டு வெறும் பையோடு/ வயிறோடு   வீட்டுக்குப் போகிறார்   பெரியவர்.
பெரியவரைப்   பொறுத்தவரைக்கும் பானை / குடம் என்பது   ஒரு பொருள் அல்ல. அது அவருடைய வியர்வை – உழைப்பு. அதனை உபயோகத்துக்காக இல்லாமல் அழிக்கப்படுவதற்காக வாங்கப்படுகிறது என்று தெரியும்போது அவர் விற்கத் தயாராக இல்லை – வயிறு   காலியாக   இருக்கும்போது கூட.
மற்றோர் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதையைப் பார்ப்போம்.
எல்லா   ஆணுக்கு உள்ளேயும்   ஒரு மிருகம் இருக்கிறது. நாம் இன்னும் ஆடை கட்டிய மிருகமாகத்தான் இருக்கிறோம். அந்த   மிருகத்தின் ஆசைதான் பெண்களை நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்ற வெறி.
இந்த   மாதிரியான மனிதர்களின் மட்டமான மனதைப் பற்றி ஒரு   கதை இருக்கிறது.
“நிர்வாணம்” என்ற பெயரில் ஒரு   சிறுகதைத் தொகுப்பு, உடுவை தில்லை நடராசா என்ற ஈழத்து   எழுத்தாளர் எழுதியது. அதில் ஆறாவது கதை –“நிர்வாணம்”
இரண்டு   இளைஞர்கள் சினிமாப் பார்க்கப் போகலாம் என்று   திட்டம் இடுகிறார்கள்.   தெருவில் வரும்போது   அம்மணமான ஒரு சிறுமி பிச்சை கேட்கிறாள்.
“பெரிய   கன்றாவியாக இருக்கு; அன்சகிக்கெபிள்”  என்று அருவருப்பு   அடைகிறார்கள் இளைஞர்கள்.
பிச்சை   கேட்கும் சிறுமியைத் துரத்தி அடிக்கறார்கள்.   அவள் விடாமல் தொந்தரவு செய்யும்போது, அவளைப் பிடித்துக் கீழே தள்ளி விடுகிறார்கள்.
“உதுகள்   உப்பிடித்தான், சில தாய் தகப்பன் தங்கடை விருப்பப்படி பெத்துத்தள்ளி   விடுகிறது…” இப்படியாகப் பேசிக்கொண்டே வரும்போது ஒரு ஆபாச ஆங்கில சினிமா   போஸ்டர் கண்ணில் படுகிறது.
“எப்பிடி   மச்சான், நல்ல படமா?” – ஒருவன் கேட்கிறான்.
“பைன்   ஷோவா இருக்கும் மச்சான். லாஸ்ற்   வீக் நான் ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தபோது சோர்ட்ஸ் போட்டுக் காட்டினவங்கள். ஹீரோயின் புல் நேக்கட்லை   ஒரு டான்ஸ். ஃபைன் மச்சான் ஃபைன்.”
“போன   மாதமும் அவளின்ர படமொண்டு பார்த்தனான். அவளின்ர   நேக்கட் டான்ஸ் பார்த்தாலே போதும், அதுக்கே   காசு குடுக்கலாம்”
என்கிறான் அடுத்தவன்.
“சரி மைச்சான்; றையுமாகுது.   கெதியாக நட; இல்லாட்டி டிக்கட்   எடுக்கேலாது”
இரண்டு பேரும் அவசரமாகத் தியேட்டருக்கு ஓடுகிறார்கள், “ஆபாசம், அன்சகிக்கெபிள்” என்று   கொஞ்ச நேரம் முன்னால் சொன்னதை மறந்துவிட்டு.
புத்தக   விவரம்:
தலைப்பு நிர்வாணம்     (சிறுகதைகள்)
எழுதியவர் உடுவை.     தில்லை நடராசா
பதிப்பகம் நியூ     செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
உரிமை ஆசிரியர்
முதல்     பதிப்பு அக்டோபர்-1991     (இலங்கை),2-ஆம்     அச்சு: பிப்-1994
ISBN 81-234-0247-3
விலை 20/-     (இருபது)
அணிந்துரை இல்லை
கிடைக்கும்     இடம் http://www.noolulagam.com/product/?pid=1721
தொடரும்.
துடிமன்னன்  

Tagged: ,

Leave a comment