இந்து மதத்தில் இடை செருகல்கள் -2
முன்பகுதி: இந்து மதத்தில் இடை செருகல்கள் -1
விஷ்ணுவின் அடிப்பொடிகள் செய்த, செய்து வருகின்ற களியாட்டங்களைப் பற்றி முன் பதிவுகளில் நான் எழுதியதைப் படித்த நண்பர்கள் சிலர், நான் அதிகப்படுத்தி எழுதுகிறேனோ என்று சந்தேகம் கொண்டிருக்கலாம். கரையான் எப்படித் தான் இருக்கும் மரத்தையே அரித்துத் தின்கிறதோ அதுபோல இவர்கள் எப்போதும் தான் கைவைத்த அனைவற்றையும் கபளீகரம் செய்து, தங்களுக்கு ஏற்றவாறு இடைச்செருகல்களைப் புகுத்துதல், மாற்றுதல் என சிறிதும் கூச்சமின்றி செயல்படுபவர்கள் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை இப்போது பார்ப்போம்.
அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழின் பல பாடல்கள் ஒலி வடிவில், இணையத்தில் http://www.kaumaram.com/thiru/index_n1.html என்ற சுட்டியில் கிடைக்கின்றன. கிடைக்கட்டுமே, நல்லதுதானே, அதற்கும் இந்தத் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்….
பல கலைஞர்கள் பாடியுள்ள பாடல்கள் இங்கு வலையேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக குருஜி என்று அழைக்கப்படும் திரு. ஏ.எஸ். இராகவன் மற்றும் குழுவினர் பாடிய பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் 3 பாடல்கள் மட்டும் பாடலின் முதல் வரியிலிருந்து ஆரம்பிக்காமல், இடையில் இருந்து பாட ஆரம்பிக்கிறார்கள். என்னடா எலி அம்மணத்துடன் ஓடுகிறதே என்று அந்த மூன்று பாடல்களை ஆராய்ந்தபோது , இவர்கள் சந்திலே சிந்து பாடுவதைக் கண்டுபிடித்தேன்.
விஷயம் இதுதான். இந்த பாடல்களில் இடையில் விஷ்ணுவின் புகழைச் சொல்லும் வரிகள் வருகின்றன. அதுவும் ‘விஷ்ணுவின் மருமகனே’ என்று குறிப்பிட்ட வகையில் வந்த வரிகள்தான் அவை. விடுவார்களா? ““ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்க வேண்டும்” அல்லவா? எனவே இவர்கள் பாட்டையே உல்டாவாக இடையில் எங்கு விஷ்ணுவைப் பற்றிக் குறிப்பு வருகிறதோ அங்கிருந்து பாட ஆரம்பிக்கிறார்கள்.
1. பாடல் 29, “அனிச்சங் கார்முகம்” என்று ஆரம்பிக்கும் பாடல். (http://www.kaumaram.com/thiru_uni/tpun0029.html )
பாடலைக் கேட்க சுட்டி: http://www.kaumaram.com/audio_k/grtp0029.html
பாடுபவர்கள் 5-ஆவது வரியில் இருந்து பாட ஆரம்பிக்கிறார்கள்.
இதில் 5-ஆவது வரியைப் பார்ப்போம் :
முனைச்சங் கோலிடு நீலம கோததி |
அடைத்தஞ் சாத இராவண னீள் பல |
முடிக்கன் றோர் கணை யேவும் இராகவன் …… மருகோனே |
பொருள்:
முனைச் சங்கு ஓலிடு நீல மகா உததி | போர்முனைக்கு உரிய சங்குகள் ஒலிக்கின்ற நீல நிறம் கொண்ட பெரிய கடலை |
அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல முடிக்கு | அடைத்து இலங்கைக்குப் பாலம் கட்டி, அஞ்சுதல் இல்லாத இராவணனுடைய நீண்ட பத்து முடிகளும் (வீழ), |
அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே | அன்று ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமனுடைய மருகனே, |
6-ஆவது வரியைப் பாருங்கள்.
முளைக்குஞ் சீதநிலாவொடு அரா விரி |
திரைக் கங்கா நதி தாதகி கூவிள |
முடிக்குஞ் சேகரர் பேரருளால் வரு …… முருகோனே —-6 |
பொருள்:
முளைக்கும் சீத நிலாவொடு அரா | திருப்பாற்கடலில் தோன்றும் குளிர்ந்த பிறைச் சந்திரனோடு, பாம்பையும், |
விரி திரை கங்கா நதி தாதகி கூவிள | விசாலமானதும் அலைகளை உடையதுமான கங்கை நதியையும், ஆத்திப் பூவையும், வில்வத்தையும் |
முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே | ஜடாமுடியில் தரிக்கும் சிவபெருமானின் பேரருளால் தோன்றிய முருகோனே. |
ஏன் சிவனைப்பற்றி வரும் 6- வது வரியில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதானே? அது எப்படி ஆரம்பிப்பார்கள்? எது கிடைத்தாலும் அதைத் தமக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு, பின் “இதுதான் உண்மை” என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் எத்தர்கள்தானே இவர்கள்? பின் எப்படி 6-ஆவது வரியில் இருந்து ஆரம்பிப்பார்கள்?
2. அடுத்து பாடல் 529 (http://www.kaumaram.com/thiru_uni/tpun0529.html) ஐப் பார்ப்போம். இது “வரிசேர்ந்திடு சேல்” என்று ஆரம்பிக்கும் பாடல்.
பாடலைக் கேட்க சுட்டி: http://www.kaumaram.com/audio_k/grtp0529.html
இதனையும் 5-ஆம் வரியில் இருந்து பாட ஆரம்பிக்கிறார்கள். ஏன் என்பது பாடலின் வரிகளைப் பார்த்தால் புரிந்து விடும்.
கரிவாம்பரி தேர்திரள் சேனையும் |
உடனாந்துரி யோதன னாதிகள் |
களமாண்டிட வேயொரு பாரத …… மதிலேகிக் ————-5 |
கனபாண்டவர் தேர்தனி லேயெழு |
பரிதூண்டிய சாரதி யாகிய |
கதிரோங்கிய நேமிய னாம் அரி …… ரகுராமன் ———-6 |
திரைநீண்டிரை வாரியும் வாலியும் |
நெடிதோங்கும ராமர மேழொடு |
தெசமாஞ்சிர ராவண னார்முடி …… பொடியாகச் ——7 |
சிலைவாங்கிய நாரணனார் மரு |
மகனாம் குகனே பொழில் சூழ்தரு |
திருவேங்கட மாமலை மேவிய …… பெருமாளே. ——–8 |
பொருள்:
கரிவாம்பரி தேர்திரள் சேனையும் | யானைப்படையும், தாவும் குதிரைப் படையும், தேர்ப்படையும், திரண்ட காலாட்படையும், |
உடனாந்துரி யோதன னாதிகள் | ஒன்றாகக் கூடியுள்ள துரியோதனாதியர் |
களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி | போர்க்களத்தில் இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று, |
கனபாண்டவர் தேர்தனி லே | பெருமைவாய்ந்த பாண்டவர்களின் தேரிலே, |
எழுபரிதூண்டிய சாரதி யாகிய … | கிளம்பிப் பாயும் குதிரைகளைச் செலுத்திய தேரோட்டி ஆனவனும், |
கதிரோங்கிய நேமியனாம் அரி ரகுராமன் | ஒளி மிகுந்த சுதர்ஸன சக்கரத்தை உடையவனுமான ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும், |
திரைநீண்டிரை வாரியும் வாலியும் | அலைகள் ஓங்கி ஒலிக்கும் கடலையும், வாலியையும், |
நெடிதோங்குமராமரம் ஏழொடு | நீண்டு உயர்ந்த ஏழு மராமரங்களையும், |
தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக | பத்துத் தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி |
சிலைவாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே … | கோதண்ட வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே, |
பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே. | சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
3. அடுத்து 870-ஆவது பாடல். (http://www.kaumaram.com/thiru_uni/tpun0870.html)
இந்தப் பாடல் “கரியகுழல் சரியமுகம்” என்று ஆரம்பிக்கிறது.
பாடலைக் கேட்க சுட்டி: http://www.kaumaram.com/audio_k/grtp0870.html
இந்தப் பாடலையும் 5-ஆம் வரியில் இருந்து பாட ஆரம்பிக்கிறாரகள். ஏன் என்பதற்குப் படலின் வரிகளைப் பாருங்கள்.
உரியதவ நெறியில்நம நாராய ணாயவென |
ஒருமதலை மொழியளவி லோராத கோபமுடன் |
உனதிறைவன் எதனிலுள னோதாய டாவெனுமுன் ……உறுதூணில் ——–5 |
உரமுடைய அரி வடிவ தாய்மோதி வீழவிரல் |
உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை |
உவணபதி நெடியவனாம் வேதாவும் நான்மறையும் …… உயர்வாக ———-6 |
பொருள்:
உரிய தவ நெறியில் நம நாராயணாய என | சரியான தவ நெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று |
ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் | ஒப்பற்ற குழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும், எண்ணமுடியாத கோபத்துடன், |
உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் | உன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு முடியும் முன்னே, |
உறு தூணில் உரமுடைய அரி வடிவதாய் | அங்கிருந்த தூணில் வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து, |
மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார்பீறி | இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து மார்பைக் கிழித்துப் பிளந்து, |
வாகை புனை உவண பதி நெடியவனும் | வெற்றிக் கொடி ஏற்றினவரும், கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும், |
வேதாவும் நான் மறையும் உயர்வாக | பிரமனும், நான்கு வேதங்களும் மேன்மை பெறும்படியாக, |
அப்பட்டமாக, தான் வணங்கும் விஷ்ணுவை முன்னிறுத்தும் பொருட்டு, பாடலையே மாற்றிப்பாடுவதற்கு இவர்கள் துணிகிறார்கள் என்றால், பழைய இலக்கியங்களில், பண்பாட்டில் எவ்வளவு தூரம் இவர்கள் இடைச்செருகல்களைப் புகுத்தி, தமக்குத் தேவையான மாதிரி மாற்றி இருப்பார்கள் என்பதை நாம் நன்றாக உணரலாம்.