என் வாசக அனுபவங்களைப் பற்றி நூல்கள் நுகர்வோம்-1 பகுதியில் சொல்லி இருக்கிறேன். வெகுஜன இதழ்களுக்கு அப்பாலும் நூல்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள சில நூல்கள் உதவின. அவற்றுள் ஒன்று, நான் எட்டாம் வகுப்பு முடிந்து விடுமுறையில் படித்த ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற பழைய நூல். |
இது நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தொகுத்த புத்தகம். ஜஸ்டிஸ் பார்ட்டி எப்படி உருவானது , சுயமரியாதை இயக்கம் எப்படி ஆரம்பித்தது, திராவிடர் கழகம் எப்படி உருவானது, பெரியார் – அண்ணா இரண்டு பேருக்கும் கருத்து வேற்றுமை எப்படி ஏற்பட்டது, தி.மு.க உருவானது எப்படி, டால்மியாபுரம் – கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், இப்படி 1965 வரைக்கும் உள்ள சம்பவங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருந்தன. |
அது வரை நமக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியாது. இந்த நூலைப் படித்ததும், அது தொடர்பாக இங்கும் அங்கும் விசாரித்து , அண்ணா யார், கலைஞர் யார், எம்ஜிஆர் யார் என்ற விவரங்கள் எல்லாம் தெரிந்து கொண்டேன். |
இப்படிப் ‘பழுத்துக்’ கொண்டு இருந்தபோது எங்கள் அப்பாவுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ‘சோவியத் நாடு’ என்ற ஒரு இதழைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பொதுவுடைமை தொடர்பான வேறு சில புத்தகங்களும் கிடைத்தன. |
- முதலாளி எல்லாரும் அநியாயமானவர்கள், கெட்டவர்கள்.
- தொழிலாளி எல்லாரும் மிகவும் நல்லவர்கள்.
- பணக்காரன் ஏழைகளைச் சுரண்டுகிறான்.
- ஏழைகள் எல்லோரும் பத்தரை மாற்றுத் தங்கங்கள்
என்றெல்லாம் அந்த நூல்களில் எழுதி இருப்பார்கள். |
எங்களுக்கு விவசாயம்தான் தொழில். தோட்டம் / காட்டில் எல்லா வேலைக்கும் கூலிக்கு ஆட்கள் வருவார்கள். அவர்களுடைய செயல்களை நான் மிக நெருக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. |
தொழிலாளிகள் எப்படி எல்லாம் வேலை செய்யாமல் ஏமாற்றுவார்கள், திருடுவார்கள், பொய் பேசி வேலைக்கு வருகிற மற்ற ஆட்களைக் கலைத்து விடுவார்கள் என்ற எல்லாவற்றையும் நான் கண்ணால் பார்த்த பின்புதான் புத்தகங்களில் எழுதப்படும் கதைகள் பெரும்பாலும் செயற்கையானவை, வலிந்து திணிக்கப்படுபவை என்பது புரிந்தது. சுரண்டல் என்பது இருமுனைக் கத்தி என்பதும், முதலாளி, தொழிலாளி இருவரில் யார் வலிமையாக இருக்கிறார்களோ அதற்குத் தகுந்த மாதிரி சுரண்டல் நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன். |
இப்படியாக எனக்குக் கிடைத்த புத்தகங்களும் , என்னுடைய ரசனையும் மாறிக்கொண்டு வந்தபோதுதான் சிற்றிதழ்கள் , புதுக்கவிதை எல்லாம் எனக்கு அறிமுகம் ஆனது. |
சிற்றிதழ் என்றால் என்ன? அதற்கான அவசியம் என்ன வந்தது? |
‘ஜனரஞ்சக’ப் பத்திரிக்கைகள் என்று சொல்லப்படுற ஆ.வி, குமுதம், குங்குமம்,கல்கி இந்த மாதிரி வார/மாத இதழ்களில் சில எழுத்தாளர்கள் மட்டுமே தொடர்ச்சியாக எழுதுவார்கள். அதனால் புதுமுகங்களுக்கு எந்த வாய்ப்பும் தராமல் Monpoly நடக்கும். |
இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன என்றால் புதிதாக எழுத வருகிற எல்லோரும் பாரதியார் மாதிரி முதல் படைப்பிலேயே பிரகாசமாக ஜொலிக்க முடியாது. |
எல்லாருக்குமே தன்னுடைய முழுத் திறமையை வெளிப்படுத்த சிறிது காலம் பிடிக்கும், அது வரைக்கும் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும். |
இதற்கு திரையுலகத்தில் இருந்தே உதாரணம் காட்டலாம். |
எம்ஜிஆர் 1936-லேயே திரையுலகில் நுழைந்து விட்டார். ஆனால் அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு வெகு நாட்களாயின. சிவாஜி கணேசனோ 1952-ல் நேராக கதாநாயகனாவே திரையுலகில் நுழைந்தார். |
கமல் – ரஜினி கதையும் இதுவே. |
முதல்படம் முடிந்ததுமே எம்ஜிஆர், ரஜினி இருவரையும் கழட்டி விட்டு , வாய்ப்புக் கொடுக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவர்களின் முழுமையான திறமை வெளியே வந்திருக்காது இல்லையா? |
இது போலத்தான் பத்திரிக்கை உலகமும். ‘ஜனரஞ்சகப்’ பத்திரிக்கைகளும் புது எழுத்தாளர்களுக்கு வாய்ப்புத் தருவதில் கஞ்சத் தனம் காட்டியதால் சில எழுத்தாளர்கள் தனியாகவோ, கூட்டாகவோ சில சிற்றிதழ்களை ஆரம்பித்தார்கள். |
தமிழ் இலக்கியப் பாதையில் முக்கியப் பங்கு வகித்த நிறைய இதழ்கள் முதலில் சிற்றிதழாக ஆரம்பிக்கப்பட்டவையே. பின்னால் புகழ் பெற்ற பல பெரிய எழுத்தாளர்கள் உருவாக அவை காரணமாக இருந்தன. (எ.கா: மணிக்கொடி, வானம்பாடி, எழுத்து, கணையாழி). |
தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகரித்து உள்ளதால், எழுத்தாளர்களும் அதிகரித்துள்ளனர். அவர்களுக்கு வெகுஜனப் பத்திரிக்கைகளில் இடம் கிடைக்காதபோது சிற்றிதழ்கள் வழியாகத் தங்கள் எழுத்துக்களை வெளிக் கொண்டு வருகிறார்கள். |
தற்போது சிற்றிதழ்களைப் போலவே இணையம் வழியாக வலைப்பூ/வலைப்பதிவு என்ற பெயரில் பல்கிப் பெருகியிருக்கிறார்கள். |
எனக்கு அறிமுகமான முதல் சிற்றிதழ் “பயணம்” என்ற பெயரில் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் வெளியாகிக் கொண்டிருந்த ஒரு சிற்றிதழ். புலியூர் முருகேசன் என்பவர் அதனை நடத்திக் கொண்டிருந்தார். அவருடன் திரு பிச்சைமுத்து, திரு சகாரா ஆகியோரும் இணைந்தனர். பின்பு அது ‘பயணம் புதிது’ என்ற பெயர் மாறுதல் அடைந்து வெளிவந்தது. |
இது போல சிற்றிதழ் நடத்துகிற எல்லோருக்கும் , மற்ற ஊரில் சிற்றிதழ் நடத்துபவர்கள் 2 -3 பிரதிகள் அனுப்புவார்கள். அதில் தேர்ந்தெடுத்த சில சிற்றிதழ்களுக்கு நான் சந்தா கட்டி வாங்கிப் படித்ததும் உண்டு. |
கவிதாசரண், முகம், நவீனவிருட்சம், காலச்சுவடு, சுந்தரசுகன், உயிர்மை, தமிழ்நேயம், சுபமங்களா, கதைசொல்லி,கனவு, சுற்றுச் சூழல் புதிய கல்வி, தமிழ்ப்பாவை, தமிழ்ச்சிட்டு, நற்றமிழ், பூங்குயில், புதிய புத்தகம் பேசுது – இவை எல்லாம் நான் படித்த சில சிற்றிதழ்களின் பெயர்களாகும். இப்போது இந்த இதழ்கள் வெளிவருகின்றனவா என்று தெரியவில்லை. |
சில சிற்றிதழ்கள் நிறுவனமாக மாறி, புத்தகம் பதிப்புச் செய்கிற அளவுக்கு முன்னேறி இருக்கின்றன. எடுத்துக்காட்டு : காலச்சுவடு, உயிர்மை |
பொள்ளாச்சி நசன் என்கிற பெரியவர் ஒருவர், இந்த மாதிரி வந்த எல்லாச் சிற்றிதழ்களைப் பற்றியும் எழுதுவதற்கு என்றே ‘சிற்றிதழ் செய்தி’ என்ற பெயரில் ஒரு சிற்றிதழ் நடத்திக் கொண்டு இருந்தார். |
தற்போது அவர் , தான் இதுவரை தொகுத்த எல்லா சிற்றிதழ்களையும் பிடிஎஃப் ஃபைகளாக மாற்றி இணையத்தில் ஏற்றி வைத்திருக்கிறார். ஆனால் ஏதோ சர்வர் பிரச்சினையினால் தற்போது அட்டையை மட்டும் பார்க்கலாம். டவுன்லோட் செய்து படிக்க முடியாது. |
சிற்றிதழ் மட்டும் இல்லாமல் வேறு புத்தகங்களை யார் தொகுத்து வைத்திருந்தாலும் அவற்றுக்கும் சேர்த்து பெரிய பட்டியல் ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளார்.. |
இனறைய தேதிக்கு 8,184 நூல்கள், 21,890 இதழ்கள் ஆக மொத்தம் 30,074 புத்தகங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தொகுக்கும் ஆசை அவருக்கு ஏன் வந்தது என்பதை அவரே சொல்கிறார்: |
/– “தொடக்கத்தில் வகைக்கு ஒரு இதழ் என்று சேகரிக்கத் தொடங்கிய நான், அந்த ஒரு இதழை வைத்துக் கொண்டு அந்த இதழின் முழுமை காட்ட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுது, இதழ்களை முழுமையாகத் திரட்ட வேண்டும் என்று விரும்பினேன். பல்வேறு நெருக்குதல்களுக்கு இடையில் நிறைய இதழ்களைச் சேகரித்தேன். எழுதிக் கொண்டிருந்த நான் எழுதுவதை நிறுத்த வேண்டியதாயிற்று. |
இப்படிச் சேகரித்த இதழ்கள் பெருகிக் கொண்டே இருந்தன. நான் திரட்டிய பல இதழ்கள்
அவற்றைச் சேகரித்தவரின் மறைவிற்குப் பிறகு அவர்களது உறவினர்களாலேயே பழைய புத்தகக் கடைக்கு விலைக்குப் போடப்பட்டவை தான். என்னுடைய தொகுப்பும், எனக்குப் பிறகு இப்படி பழைய புத்தகக் கடைக்குச் சென்று விடுமோ என்ற அச்சம் எனக்குள் தோன்றிக்
கொண்டே இருந்தது. எப்படியாவது இவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்த வேண்டும் என்ற உணர்வு கனன்று கொண்டே இருந்தது. |
உடைந்த நிலையில் கிடைத்த பழைய இதழ்கள், தரமாகத் தொடர்ந்து கருத்து விதைக்கும் புதிய இதழ்கள், என்று குவிந்த, இந்த இதழ்களில் நான் படித்துச் சுவைத்த அருமையான செய்திகள், ஒவ்வொன்றையும் தொகுத்தேன். என் பார்வைக்கு வந்த இதழ்களிலிருந்த கருத்துகளை சுவைத்த பக்கங்கள் என்று இணையத்தில் இணைக்கத் தொடங்கினேன். “ —/ |
இந்தப் பட்டியலில் இல்லாத புத்தகம் ஏதாவது உங்களிடம் இருந்தால், ஸ்கேன் செய்து அவருக்கு அனுப்பலாம்,அவருடைய மின்னஞ்சல் முகவரி :பொள்ளாச்சி நசன் – pollachinasan@gmail.com பேச:(04259)221278 அலைபேசி : 9788552061, |
சிற்றிதழ் பட்டியல் உள்ள தளத்துக்கன சுட்டி: http://www.thamizham.net/ |
[தொடரும்] |