Category Archives: இதழியல்

நூல்கள் நுகர்வோம் -5

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

  1. நூல்கள் நுகர்வோம்-1
  2. நூல்கள் நுகர்வோம்-2
  3. நூல்கள் நுகர்வோம்-3
  4. நூல்கள் நுகர்வோம்-4
/–எழுத்தாளன் என்றைக்குமே சமூகத்தை விட, குறைந்தது ஒரு தலைமுறையாவது தாண்டி முன்னோக்கி யோசிக்க வேண்டும். அப்போதுதான் அவனுடைய நல்ல கருத்துக்கள் உந்து சக்தியாக மாறி சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆனால் எழுதுபவனோ அல்லது மற்ற படைப்பாளியோ , எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்? –/
இவை  சென்ற பதிவில் நாம் எழுதிய வரிகள். இந்தப் பதிவை இந்தக்   கருத்தில் இருந்து ஆரம்பிப்போம்.
இன்றைய   தேதிக்கு, இந்திய மொழிகளிலேயே அதிகமாக புத்தகங்கள் வெளியாவது   தமிழில்தான் என்று  நினைக்கிறேன். என்னிடம் புள்ளி விவரம் கிடையாது. இருந்தாலும்  என் உள்ளுணர்வு சொல்கிறது.
இதற்கு   என்ன காரணம் என்று பார்த்தால், நம் எழுத்தறிவு தான். வெள்ளைக்காரர்கள்  தங்கள் பண்பாடு, கல்விமுறை மூலமாக அதிகமாக   பாதித்த மாநிலங்கள் வங்காளம், தமிழ்நாடு   இரண்டுதான். கேரளா, தமிழ்நாட்டில் இருந்து பிரிந்ததனால் அதைத் தனியாக   சேர்த்துக் கொண்டால் வங்காளம், தமிழ்நாடு, கேரளா  இந்த மூன்று மாநிலங்களையும் சொல்லலாம்.
இந்தியாவுக்கு   சுதந்திரம் கிடைத்த காலத்தில் நிர்வாகத்தை நடத்திக்கொண்டு இருந்த முக்கால்வாசி  சிவில் சர்வீஸ் அதிகாரிகள் இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். (இப்போது எல்லாம் மாறிவிட்டது)
இலக்கியம், சினிமா, இதழியல் போன்ற துறைகளில் வேகமாக முன்னேறியதும் இந்த மூன்று மொழிகள்தான். ஆனால், விருது   அடிப்படையில பார்த்தால் வங்காளி, மலையாளம்   அளவுக்கு தமிழின் தரம் பிரதிபலிக்கவில்லை.
ஞானபீட   விருது பட்டியல் : மொழிவாரியாக (2012 வரை)

எண்ணிக்கை மொழி விளக்கம்
9 ஹிந்தி 6-தனி, 3-பகிர்வு
8 கன்னடம் 6-தனி, 2-பகிர்வு
5 மலையாளம் 5 –ம்     தனியாக
5 பெங்காளி 5 –ம்     தனியாக
4 ஒரியா 3-தனி, 1-பகிர்வு
4 உருது 4-ம்     தனியாக
3 மராத்தி 3-ம்     தனியாக
3 தெலுங்கு 3-ம்     தனியாக
3 குஜராத்தி 2-தனி, 1-பகிர்வு
2 அஸ்ஸாமி 2-ம்     தனியாக
2 தமிழ் 2-ம்     தனியாக
2 பஞ்சாபி 1-தனி, 1-பகிர்வு

நன்றி: http://en.wikipedia.org/wiki/Jnanpith_Award

வெளிப்படையாக   சொன்னால் தமிழ் மொழி இருக்கும் இடமே தெரியவில்லை.
மேலோட்டமாகப்   பார்த்தால் தமிழில் எழுதப்படும் படைப்புகளின் தரம்  சரியில்லை அல்லது நமது   எழுத்துக்கள் வெளியே ரெஃப்லெக்ட் ஆகவில்லை, ஆகிய இந்த  இரண்டும் காரணமாக இருக்க முடியும் என்று நீங்கள் சொல்லலாம்.  இது மட்டும் இல்லாமல்  மொழிகளுக்கு இடையிலான அரசியல் என்றும் சொல்லலாம்.   அதிலும் உண்மை இருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை.
நன்றாக யோசித்துப்   பார்த்தால், அரசியல் எங்குதான் இல்லை? தேவகவுடா   பிரதமராக இருந்தபோது,  இந்தியக் கிரிக்கெட் அணியில் 6 பேர்   கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். (டைட்டன் கப்-1996 : ஜவஹல்   ஶ்ரீநாத், அனில் கும்ப்ளே, சுனில்   ஜோஷி, ராகுல் திராவிட், வெங்கடேஷ்   பிரசாத், சுஜித் சோமசுந்தர்).  ஆனால் அதனால் சச்சின் டெண்டுல்கர்   வெளியில் தள்ளப்படவில்லையே?
தமிழ்   இலக்கியம் இப்படி நாறிப் போகக் காரணம் வேறு. மிக மிக முக்கியமான   காரணம்  உள்ளடி (சாதி) அரசியல்தான்.
இராமாயணத்தைத்   தழுவல் செய்து இராஜாஜி ‘சக்கரவர்த்தித்   திருமகன்’ எழுதினார்.  உடனே சாகித்ய அகாடமி (1958) பரிசு   கிடைத்தது.
சு.சமுத்திரம்    மாய்ந்து மாய்ந்து 300க்கும்   மேல சிறுகதைகள், 10-15 நாவல் எல்லாம் எழுதி,   1990-ல சாகித்ய அகாடமி பரிசு (‘வேரில்   பழுத்த பலா’ -நாவல்) வாங்கியபோது சிலர், ‘குய்யோ   முறையோ’  என்று எல்லோரும் கூப்பாடு போட்டார்கள்.  ‘சாகித்ய   அகாடமியிலயும் இட ஒதுக்கீடு  நுழைந்து விட்டது ‘  என்று எழுதி, புழுத்து, நாறிப்   போன  தங்கள்  மனப்பிறழ்வைக்  காட்டினார்கள்.
இராஜாஜி   தழுவல் செய்து எழுதினால் அது திறமை. சமுத்திரம்  உழைத்து முன்னுக்கு வந்தால் அது இட   ஒதுக்கீடு. இந்த மனப்போக்கு இருந்தால்,  நம்மை யார் சீந்துவார்கள்?
தமிழ்நாட்டில்   எழுத்தாளன்  எனப்படுபவன் ஒரு ஈ(ன)ப் பிறவி. அதுவும் எழுத்தையே முழு நேரமாகச்   செய்பவர்கள் எல்லாம்  பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரர்கள்.  கேரளாவில் ஒரு எழுத்தாளர்   செத்துப் போனால், எல்லா நாளிதழ்களிலும் (ஆங்கில நாளிதழ்கள் உள்பட) முதல் பக்கத்தில் படத்துடன் செய்தி வரும். தமிழ்நாட்டில் ?
[தொடரும்]

துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -4

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

  1. நூல்கள் நுகர்வோம்-1
  2. நூல்கள் நுகர்வோம்-2
  3. நூல்கள் நுகர்வோம்-3
நான் படித்த, அட்டையில்லாத புத்தகங்களைப் பற்றி முன் பகுதிகளில் சொல்லி இருந்தேன். அட்டை இல்லாத , முன் பக்கங்கள் இல்லாத புத்தகங்கள் கூடப் பரவாயில்லை. புத்தகத்தின் நடை/கதைப் போக்கை வைத்து, முன்பகுதியில் என்ன இருந்திருக்கும் என்ற ஊகம் செய்யலாம். ஆனால் பின் பக்கங்கள் கிழிந்து போன நாவல் கிடைத்தால் என்ன செய்ய? [பெரும்பாலும் நாவல்களில் கடைசிப் பக்கத்தில்தான் கதையின் முடிச்சு அவிழும்]
கொஞ்சம் ஆழமாக யோசித்தால், நம் மனித வாழ்க்கையும் முதல் மற்றும் கடைசிப் பக்கங்கள் கிழிந்து போன ஒரு அட்டையில்லாத புத்தகம் தானே? எங்கே இருந்து வந்தோம் என்பது தெரியாது. எங்கே போகப்போகிறோம், என்ன ஆகப் போகிறோம் என்பதும் தெரியாது.இருந்தாலும் 99% மக்கள் எந்தக் கவலையும் இல்லாமல் தின்று, கழிந்து, அடுத்தவன் முதுகில் முள்ளைக் குத்தி, அவன் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டுதிரிகிறது.
நாம் சென்ற பதிவில் சிற்றிதழ்கள் பற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இந்த சிற்றிதழ்களின் பங்கு மிக மிக முக்கியமானது.
எத்தனையோ புகழ்மிக்க எழுத்தாளர்கள், கவிஞர்கள் இந்த சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்துதான் பிற்காலத்தில் பெரிய ஆட்களாக ஆனார்கள். ஆனால் புகழ் வந்ததும் வெகுசனப் பத்திரிக்கைகளில் சேர்ந்துகொண்டு சிற்றிதழ்களைத் திரும்பிப்பார்க்காமல் அநாதையாக விட்டுவிட்டார்கள்.
இந்த மாதிரி சிற்றிதழ்களோட வளர்ச்சியைப் பார்த்துவிட்டு, வெகுஜனப் பத்திரிக்கைகள் கூட இலக்கிய இணைப்பு / தனி இதழ் வெளியிட ஆரம்பித்தார்கள். இந்தியா டுடே, கல்கி இதழ்கள் எல்லாம் தீபாவளி மலர் வெளியிடுவதெல்லாம் இப்படித்தான். குமுதம் இதழ் சார்பாக ‘தீராநதி’ என்ற பெயரில் ஒரு புத்தகம் 2002-ல இருந்து மாத இதழாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.
புதுக்கவிதை / கவிஞர்களை வளர்த்தெடுத்தது இந்த சிற்றிதழ்கள்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
இந்த சிற்றிதழ்களுக்கே உள்ள நோய் என்னவென்றால், சந்தா கிடைத்தால்தான் உயிர் வாழ முடியும். விளம்பரங்களுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதனாலேயே , பல இதழ்கள் ஆரம்பித்த ஓரிரண்டு ஆண்டுகளிலேயே நின்று போய் விடுகின்றன.
இன்னொரு காரணம், பெரும்பாலான சிற்றிதழ்கள் ஒன்று அல்லது இரண்டு எழுத்தாளர்களின் சுய முயற்சியில் வெளியாவதுதான். இது ஒரு நிறுவனமாக செயல்படாததால் , அந்தத் தனி மனிதர்களின் வாழ்க்கையில நிகழும் பல சம்பவங்கள் இதழ் வெளியீட்டை பாதிக்கின்றன.
சித்தூர் முருகேசன் அவர்கள் தனது கவிதை-07 வலைப்பதிவில் ‘நீங்களும் உங்க எதிரியும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதற்கான சுட்டி http://kavithai07.blogspot.in/2010/08/blog-post_1455.html. இந்தக் கட்டுரையில், புத்தகங்களின் தரம், எழுத்தாளர்களின் மனநிலை பற்றிய ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.
/–ஒரு குப்பை தொட்டி நிறைய புஸ்தவங்களை கிளறி புரட்டினா ஒரு பாக்கெட் டயரி ரொம்பினா சாஸ்தி. எழுதறவன்ல நிறைய பார்ட்டி தொடை நடுங்கிங்க. எஸ்கேப்பிஸ்டுங்க. கற்பனா வாதிங்க. வெறுமனே மூளையாலே சிந்திக்கிற பார்ட்டிங்க.–/
இது எவ்வளவு பெரிய உண்மை. இதை இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்ப்போம்.
புகழ் அடைந்துவிட்ட எழுத்தாளர்கள் எழுதுகிற எல்லாமே நல்ல எழுத்து என்று சொல்ல முடியாது. இது சினிமாவுக்கும் பொருந்தும். எம்ஜிஆர் , சிவாஜி நடித்த எல்லாப் படங்களுமே நல்ல படங்கள் என்று சொல்லி விட முடியாது. இருந்தாலும் இவர்கள் புகழ் அடைந்த பின்னால், இவர்களின் எல்லாப் படைப்புகளையும் நல்ல படைப்புகளாக நம்மை அறியாமலே ஏற்றுக் கொள்கிறோம்.
இவ்வாறு புகழ் அடைந்த எழுத்தாளர்களின் பின்னால் பதிப்பாளர்கள் ஓடுவதால் மற்ற புதிய எழுத்தாளர்கள் / படைப்பாளிகள் எல்லாம் அரசமரத்துக்கு அடியில் முளைத்த செடி போல வளர முடியாமல் காய்ந்து போகிறார்கள்.
எழுத்தாளன் என்றைக்குமே சமூகத்தை விட, குறைந்தது ஒரு தலைமுறையாவது தாண்டி முன்னோக்கி யோசிக்க வேண்டும். அப்போதுதான் அவனுடைய நல்ல கருத்துக்கள் உந்து சக்தியாக மாறி சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆனால் எழுதுபவனோ அல்லது மற்ற படைப்பாளியோ , எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்?

/–

எழுதறவன்ல நிறைய பார்ட்டி தொடை நடுங்கிங்க. எஸ்கேப்பிஸ்டுங்க.–/

‘எழுதறவன்’ என்பதை இன்னும் விரிவாக ஆக்கினால் எல்லாப் படைப்பாளிகளுக்கும் இந்த விமர்சனம் பொருந்தும். பல திரைப்படங்களில் முக்கோணக் காதல் கதை இருக்கும், அதில் ஒரு பெண்ணைக் கடைசியில் கொன்று விடுவார்கள். ஏன் எனில் பலதாரமணம் நடந்ததாகக் காட்டக் கூடாது என்ற எண்ணம். ஆனால் இருதாரம் உள்ளவன் ஊருக்கு இரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சில திரைப்படங்களில் விதவையைக் காட்டுவார்கள். அவளுக்குத் திரும்பவும் திருமணம் ஆவதற்கான வாய்ப்புக் கூடி வருவது போலக் காட்டி இறுதியில் ஏமாற்றுவார்கள். (எ.கா. வைதேகி காத்திருந்தாள்). ஆனால் இங்கே வேடிக்கைக்குரிய விஷயம் என்ன என்றால், விதவைத் திருமணம் நடப்பது போன்ற கதைகள் 1950-60க்கு முன்னாலேயே வந்து விட்டன. மக்களும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். பின்னால் வந்த தொடை நடுங்கிகள், படம் ஓடாமல் போய்விடுமோ என்று தாங்களாகவே கற்பனை செய்துகொண்டு, பழைமைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தத் திரைப்படத்திலாவது, சந்தர்ப்பவசத்தால் கெட்டுப்போன பெண் வாழ்ந்ததாகக் காட்டவே மாட்டார்கள். அவள் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டு செத்து போவாள். ஏன் அய்யா, கற்பழிக்கப்பட்டவள், கணவனால் கைவிடப்பட்டவள், ஏமாற்றப்பட்டு கர்ப்பமானவள் இவர்கள் எல்லாம் வாழக் கூடாதா? 99% சினிமாவில் இவர்கள் எல்லாம் செத்துப் போவதாகக் காட்டுவது ஏன்? அதுதான் எஸ்கேபிஸம்.
இந்த விஷயத்தில் திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது, கதை / நாவல் எழுதுகிற எழுத்தாளர்களுக்குச் சுதந்திரம் அதிகம். ஏன் எனில், அவர் முதல் போட்டு வியாபாரம் செய்யவில்லை. அவருடைய கதையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவருக்கு நஷ்டம் குறைவு.
இந்த சுதந்திரம் இருந்ததால்தான் தி.ஜா (தி.ஜானகிராமன்) தைரியமாக, ஒரு வேசியைக் கதாநாயகியாக வைத்து ‘மரப்பசு’ நாவலை எழுதி வெளியிட முடிந்தது. தைரியமாக “இத்தோட 300 பேருக்கு மேல ஆச்சு” என்று வசனம் பேச வைக்க முடிந்தது. இந்த நாவலில் எங்குமே விரசமோ, காமத்தைத் தூண்டுகிற விவரிப்புகளோ இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அதே நேரத்தில், வேசியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து விரசம் இல்லாமல் யாராவது திரைப்படம் எடுத்திருக்கிறார்களா? அந்த மாதிரி திரைப்படங்களில் எப்படிப்பட்ட காட்சிகள் வந்தன என்பதை நான் இங்கே சொல்ல வேண்டியதே இல்லை. வியாபார நோக்கில் உருவாக்கப்படும் எந்தப் படைப்பும் இப்படித்தான் உயிரற்று இருக்கும்.

[தொடரும்]

துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -3

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

நூல்கள் நுகர்வோம்-1

நூல்கள் நுகர்வோம்-2

என் வாசக அனுபவங்களைப் பற்றி நூல்கள் நுகர்வோம்-1 பகுதியில் சொல்லி இருக்கிறேன். வெகுஜன இதழ்களுக்கு அப்பாலும் நூல்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள சில நூல்கள் உதவின. அவற்றுள் ஒன்று, நான் எட்டாம் வகுப்பு முடிந்து விடுமுறையில் படித்த ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற பழைய நூல்.
இது நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தொகுத்த புத்தகம். ஜஸ்டிஸ் பார்ட்டி எப்படி உருவானது , சுயமரியாதை இயக்கம் எப்படி ஆரம்பித்தது, திராவிடர் கழகம் எப்படி உருவானது, பெரியார் – அண்ணா  இரண்டு பேருக்கும் கருத்து வேற்றுமை எப்படி ஏற்பட்டது, தி.மு.க உருவானது எப்படி, டால்மியாபுரம் – கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், இப்படி 1965 வரைக்கும் உள்ள சம்பவங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருந்தன.
அது வரை நமக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியாது. இந்த நூலைப் படித்ததும், அது தொடர்பாக இங்கும் அங்கும் விசாரித்து , அண்ணா யார், கலைஞர் யார், எம்ஜிஆர் யார் என்ற விவரங்கள் எல்லாம்  தெரிந்து கொண்டேன்.
இப்படிப் ‘பழுத்துக்’ கொண்டு  இருந்தபோது எங்கள் அப்பாவுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ‘சோவியத் நாடு’  என்ற ஒரு இதழைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.  பொதுவுடைமை தொடர்பான வேறு சில புத்தகங்களும் கிடைத்தன.
  1. முதலாளி எல்லாரும் அநியாயமானவர்கள், கெட்டவர்கள்.
  2. தொழிலாளி எல்லாரும் மிகவும் நல்லவர்கள்.
  3. பணக்காரன் ஏழைகளைச்  சுரண்டுகிறான்.
  4. ஏழைகள் எல்லோரும் பத்தரை மாற்றுத் தங்கங்கள்

என்றெல்லாம் அந்த நூல்களில் எழுதி இருப்பார்கள்.

எங்களுக்கு விவசாயம்தான் தொழில். தோட்டம் / காட்டில் எல்லா வேலைக்கும் கூலிக்கு ஆட்கள் வருவார்கள். அவர்களுடைய செயல்களை நான் மிக நெருக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
தொழிலாளிகள்  எப்படி எல்லாம் வேலை செய்யாமல் ஏமாற்றுவார்கள், திருடுவார்கள், பொய் பேசி வேலைக்கு வருகிற மற்ற ஆட்களைக் கலைத்து விடுவார்கள்  என்ற எல்லாவற்றையும் நான் கண்ணால் பார்த்த பின்புதான்  புத்தகங்களில் எழுதப்படும் கதைகள் பெரும்பாலும் செயற்கையானவை, வலிந்து திணிக்கப்படுபவை என்பது புரிந்தது. சுரண்டல் என்பது இருமுனைக் கத்தி என்பதும், முதலாளி, தொழிலாளி இருவரில் யார் வலிமையாக இருக்கிறார்களோ அதற்குத் தகுந்த மாதிரி சுரண்டல் நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இப்படியாக எனக்குக் கிடைத்த   புத்தகங்களும் , என்னுடைய ரசனையும் மாறிக்கொண்டு  வந்தபோதுதான்   சிற்றிதழ்கள் , புதுக்கவிதை எல்லாம் எனக்கு அறிமுகம் ஆனது.
சிற்றிதழ் என்றால் என்ன? அதற்கான அவசியம் என்ன வந்தது?
‘ஜனரஞ்சக’ப் பத்திரிக்கைகள் என்று சொல்லப்படுற ஆ.வி,   குமுதம், குங்குமம்,கல்கி இந்த மாதிரி வார/மாத இதழ்களில் சில எழுத்தாளர்கள்   மட்டுமே தொடர்ச்சியாக எழுதுவார்கள். அதனால்  புதுமுகங்களுக்கு எந்த வாய்ப்பும் தராமல் Monpoly நடக்கும்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன என்றால் புதிதாக எழுத வருகிற   எல்லோரும் பாரதியார் மாதிரி முதல் படைப்பிலேயே பிரகாசமாக ஜொலிக்க முடியாது.
எல்லாருக்குமே தன்னுடைய  முழுத் திறமையை வெளிப்படுத்த சிறிது காலம் பிடிக்கும், அது வரைக்கும்   அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இதற்கு திரையுலகத்தில் இருந்தே உதாரணம் காட்டலாம்.
எம்ஜிஆர்  1936-லேயே  திரையுலகில் நுழைந்து விட்டார். ஆனால் அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு  வெகு நாட்களாயின.   சிவாஜி கணேசனோ 1952-ல் நேராக கதாநாயகனாவே  திரையுலகில் நுழைந்தார்.
கமல் – ரஜினி கதையும் இதுவே.
முதல்படம் முடிந்ததுமே எம்ஜிஆர், ரஜினி  இருவரையும்   கழட்டி விட்டு , வாய்ப்புக் கொடுக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவர்களின்  முழுமையான  திறமை வெளியே வந்திருக்காது   இல்லையா?
இது போலத்தான் பத்திரிக்கை உலகமும். ‘ஜனரஞ்சகப்’ பத்திரிக்கைகளும்   புது எழுத்தாளர்களுக்கு வாய்ப்புத் தருவதில் கஞ்சத் தனம் காட்டியதால் சில எழுத்தாளர்கள் தனியாகவோ, கூட்டாகவோ சில சிற்றிதழ்களை ஆரம்பித்தார்கள்.
 தமிழ் இலக்கியப் பாதையில் முக்கியப் பங்கு வகித்த   நிறைய இதழ்கள் முதலில் சிற்றிதழாக ஆரம்பிக்கப்பட்டவையே. பின்னால் புகழ் பெற்ற பல பெரிய   எழுத்தாளர்கள் உருவாக அவை காரணமாக இருந்தன. (எ.கா: மணிக்கொடி, வானம்பாடி, எழுத்து, கணையாழி).
தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகரித்து உள்ளதால், எழுத்தாளர்களும் அதிகரித்துள்ளனர்.  அவர்களுக்கு வெகுஜனப் பத்திரிக்கைகளில் இடம் கிடைக்காதபோது சிற்றிதழ்கள்  வழியாகத் தங்கள் எழுத்துக்களை வெளிக் கொண்டு வருகிறார்கள்.
 தற்போது சிற்றிதழ்களைப் போலவே இணையம் வழியாக   வலைப்பூ/வலைப்பதிவு  என்ற பெயரில் பல்கிப்   பெருகியிருக்கிறார்கள்.
 எனக்கு அறிமுகமான முதல் சிற்றிதழ் “பயணம்”  என்ற  பெயரில் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் வெளியாகிக் கொண்டிருந்த ஒரு சிற்றிதழ். புலியூர் முருகேசன் என்பவர்  அதனை நடத்திக் கொண்டிருந்தார்.  அவருடன் திரு பிச்சைமுத்து, திரு சகாரா ஆகியோரும் இணைந்தனர். பின்பு அது ‘பயணம் புதிது’ என்ற பெயர் மாறுதல் அடைந்து வெளிவந்தது.
 இது போல சிற்றிதழ் நடத்துகிற எல்லோருக்கும் , மற்ற ஊரில் சிற்றிதழ் நடத்துபவர்கள்  2 -3 பிரதிகள்  அனுப்புவார்கள். அதில் தேர்ந்தெடுத்த சில சிற்றிதழ்களுக்கு நான் சந்தா கட்டி வாங்கிப் படித்ததும் உண்டு.
 கவிதாசரண், முகம், நவீனவிருட்சம், காலச்சுவடு, சுந்தரசுகன், உயிர்மை, தமிழ்நேயம், சுபமங்களா, கதைசொல்லி,கனவு, சுற்றுச் சூழல் புதிய கல்வி, தமிழ்ப்பாவை, தமிழ்ச்சிட்டு, நற்றமிழ், பூங்குயில், புதிய புத்தகம் பேசுது – இவை எல்லாம் நான் படித்த  சில சிற்றிதழ்களின் பெயர்களாகும். இப்போது இந்த இதழ்கள் வெளிவருகின்றனவா என்று தெரியவில்லை.
சில சிற்றிதழ்கள் நிறுவனமாக மாறி, புத்தகம் பதிப்புச் செய்கிற அளவுக்கு முன்னேறி இருக்கின்றன.  எடுத்துக்காட்டு : காலச்சுவடு, உயிர்மை
 பொள்ளாச்சி நசன் என்கிற பெரியவர் ஒருவர், இந்த மாதிரி வந்த எல்லாச் சிற்றிதழ்களைப் பற்றியும் எழுதுவதற்கு என்றே  ‘சிற்றிதழ் செய்தி’ என்ற பெயரில் ஒரு சிற்றிதழ் நடத்திக் கொண்டு இருந்தார்.
தற்போது அவர் , தான் இதுவரை தொகுத்த எல்லா சிற்றிதழ்களையும்  பிடிஎஃப்  ஃபைகளாக  மாற்றி  இணையத்தில் ஏற்றி வைத்திருக்கிறார். ஆனால் ஏதோ சர்வர் பிரச்சினையினால்  தற்போது அட்டையை மட்டும் பார்க்கலாம். டவுன்லோட் செய்து படிக்க முடியாது.
சிற்றிதழ் மட்டும் இல்லாமல் வேறு புத்தகங்களை  யார் தொகுத்து வைத்திருந்தாலும்  அவற்றுக்கும் சேர்த்து பெரிய பட்டியல் ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளார்..
 இனறைய தேதிக்கு 8,184 நூல்கள், 21,890 இதழ்கள் ஆக மொத்தம் 30,074 புத்தகங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தொகுக்கும் ஆசை அவருக்கு ஏன் வந்தது என்பதை அவரே சொல்கிறார்:
 /– “தொடக்கத்தில் வகைக்கு ஒரு இதழ் என்று சேகரிக்கத் தொடங்கிய நான், அந்த ஒரு இதழை வைத்துக் கொண்டு அந்த இதழின் முழுமை காட்ட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுது, இதழ்களை முழுமையாகத் திரட்ட வேண்டும் என்று விரும்பினேன். பல்வேறு  நெருக்குதல்களுக்கு இடையில் நிறைய இதழ்களைச் சேகரித்தேன். எழுதிக் கொண்டிருந்த நான் எழுதுவதை நிறுத்த வேண்டியதாயிற்று.
இப்படிச் சேகரித்த இதழ்கள் பெருகிக் கொண்டே இருந்தன. நான் திரட்டிய பல இதழ்கள்
அவற்றைச் சேகரித்தவரின் மறைவிற்குப் பிறகு அவர்களது உறவினர்களாலேயே பழைய புத்தகக் கடைக்கு விலைக்குப் போடப்பட்டவை தான். என்னுடைய தொகுப்பும், எனக்குப் பிறகு இப்படி பழைய புத்தகக் கடைக்குச் சென்று விடுமோ என்ற அச்சம் எனக்குள் தோன்றிக்
கொண்டே இருந்தது. எப்படியாவது இவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்த வேண்டும் என்ற உணர்வு கனன்று கொண்டே இருந்தது.
உடைந்த நிலையில் கிடைத்த பழைய இதழ்கள், தரமாகத் தொடர்ந்து கருத்து விதைக்கும் புதிய இதழ்கள், என்று குவிந்த, இந்த இதழ்களில் நான் படித்துச் சுவைத்த அருமையான செய்திகள், ஒவ்வொன்றையும் தொகுத்தேன். என் பார்வைக்கு வந்த இதழ்களிலிருந்த கருத்துகளை  சுவைத்த பக்கங்கள் என்று இணையத்தில் இணைக்கத் தொடங்கினேன். “ —/
இந்தப் பட்டியலில் இல்லாத புத்தகம் ஏதாவது உங்களிடம் இருந்தால், ஸ்கேன் செய்து அவருக்கு அனுப்பலாம்,அவருடைய  மின்னஞ்சல் முகவரி :பொள்ளாச்சி நசன் – pollachinasan@gmail.com பேச:(04259)221278 அலைபேசி : 9788552061,
சிற்றிதழ் பட்டியல் உள்ள  தளத்துக்கன சுட்டி: http://www.thamizham.net/
[தொடரும்]

-துடிமன்னன்

இறந்து போன இதழியல் தர்மம்

இறந்து போன இதழியல் தர்மம்

சமீபத்தில், ஒரு தொலைக்காட்சி நிறுவனம் லஞ்சம் கேட்டதாக ஒரு நிறுவனத் தலைவர் அறிக்கை கொடுத்தது நினைவிருக்கலாம். ஏதோ இந்தப் பிரச்சினை இப்போதுதான் தோன்றியிருப்பது போல ஊடகங்கள் இதனை மூடி மறைக்க முயற்சி செய்து கொண்டுள்ளன. உண்மையில், ஜனநாயகத்தின் நான்காம் தூண் உளுத்துப் போய் வெகு நாட்களாகி விட்டன.

என் கண் முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு அரசு நிறுவன ஊழியர்கள் ஒரு முறை சம்பள உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்தார்கள். அந்த ஊழியர்களின் கூட்டமைப்பின் தலைவர்களை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் சந்தித்து, ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், அவர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக பேரம் பேசியது.  ஊழியர்களின் தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. “சம்பள உயர்வு கேட்பது என்பது  எங்கள் நியாயமான கோரிக்கை. அதனைச் செய்தியாக வெளியிட எதற்காக நாங்கள் பணம் கொடுக்க வேண்டும்? “ என்று  மறுத்து விட்டனர்.

அதன் காரணமாக,  அந்த ஊழியர்களின் போராட்டத்தை மிகக் கேவலமாகச் சித்தரித்தது அந்தத் தொலைக்காட்சி. அந்த ஊழியர்கள் நாட்டைச் சீர்குலைப்பதாகவும், அவர்கள் அனைவரும் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தேசத் துரோகிகள் என்றும் அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

எல்லா ஊடகங்களும் Corporate நிறுவனங்களிடம் இருந்து ‘விளம்பரம்’ என்ற பெயரில் கட்டாய வசூல் நடத்துகிறார்கள் என்பதுதான் உண்மை. என்றைக்கு அந்த Corporate  நிறுவனங்கள் பணம் தருவதை நிறுத்துகிறார்களோ, அந்த நிறுவனத்தைப் பற்றி இல்லாத, பொல்லாத செய்திகளை வெளியிடுவார்கள். அந்த நிறுவனத்தைப் பற்றி அவதூறாகச் செய்திகளைப் பரப்புவார்கள்.

சந்தாவில் வரும் பணத்தில் நடந்த ஊடகங்கள் இப்போது விளம்பரம் என்ற பெயரில் பணம் காய்க்கும் மரங்களாக மாறி வருகின்றன.  இதழியல் நிறுவனங்கள் லாப நோக்கிலான கம்பெனிகளாக மாறி வெகு காலம் ஆகி விட்டது. தங்களுக்கு இருக்கும் ‘கருத்து உரிமை’ என்ற அதிகாரத்தைக் கொண்டு யாரை வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

சில ‘தேசிய’ செய்தித் தாள்கள் செய்யும் கூத்து இன்னும் கேவலமானது.  தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்திற்கும் நதிநீர்ப் பிரச்சினை முற்றும்போது சென்னையில் வெளியாகும் செய்தித்தாளின் பதிப்பில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகவும், பெங்களூரில் இருந்து வெளியாகும் பதிப்பில் கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் செய்தி வெளியிடுகிறார்கள். ஒரே செய்தித்தாள், ஆனால் செய்தியில் அவர்கள் காட்டும் சார்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறும்.

2-ஜி – பிரச்சினையில் சில செய்தியாளர்கள், புரோக்கர்களாக மாறிச் செயலாற்றியதை நாடே பார்த்தது. ஆனால் அதே ஆட்கள், கொஞ்சம் கூட வருத்தமின்றி இன்றும் தங்கள் வேலையைத் தொடர்கிறார்கள். அவர்களின் இதழியல் தர்மத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

இன்று மக்களுக்கு செய்தி கேட்பது/பார்ப்பது என்பது ஒரு நோயாக மாறி இருக்கிறது. கொலை நடப்பதை ‘Live’ –ஆகக் காட்டினாலும் , எந்தவித உணர்வுமின்றி அதனைக் கண்டு களிக்கும் அளவிற்கு உணர்ச்சியற்ற காங்க்ரீட் தூண்களாக மக்களை இந்த ஊடகங்கள் மாற்றி வைத்திருக்கின்றன.

மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தபோது அதை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்பினார்கள். அங்கே தாக்குதலில் சிக்கிக் கொண்டவர்கள், தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த படைவீரர்கள் ஆகியோரின் உறவினர்களிடம் கேட்டுப்பாருங்கள், இந்த ‘Live Coverage’ எவ்வளவு துன்பமானது, அபத்தமானது என்பதை அவர்கள் சொல்வார்கள்.

கிரிக்கட் விளையாட்டையும் , மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் ஒரே மாதிரி ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளை வளர்த்து விடுவது நாம் அல்லாமல் வேறு யார்?