நூல்கள் நுகர்வோம் -6

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

  1. நூல்கள் நுகர்வோம்-1
  2. நூல்கள் நுகர்வோம்-2
  3. நூல்கள் நுகர்வோம்-3
  4. நூல்கள் நுகர்வோம்-4
  5. நூல்கள் நுகர்வோம்-5
சென்ற பதிவில், தமிழில் ஏகப்பட்ட பேர் எழுதினாலும், விருது வாங்குவதில் மற்ற மொழிகளுக்குப்  பின்னால்  இருக்கிறோம் என்பதையும் அதற்கான  காரணங்களையும்  பார்த்தோம்.
எழுத்தைப் பொறுத்தவரை எண்ணிக்கை முக்கியம்  இல்லை,  தரம்தான் முக்கியம் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது.  அதே நேரத்தில்  எழுத்து என்பது ஸ்விச்சைத் தட்டினால்  எந்திரத்தில்  இருந்து  வெளியே கொட்டுகிற விஷயம் இல்லை. அதனால் இது நல்லது, இது நல்லது இல்லை என்கின்ற குவாலிட்டி கன்ட்ரோல் எல்லாமே எழுதி முடித்து வெளியான பின்னால்தான் செய்ய முடியும்.
வெளி வந்த ஒன்று இரண்டு படைப்புகளை மட்டும்   வைத்து , இவன் வேலைக்காக   மாட்டான் , இவன் ‘கிழித்து’ விடுவான்   என்று ஆரூடம் எல்லாம் செய்யாமல்   இருப்பதுதான் ஒரு நல்ல விமர்சகனுடைய  கடமை. ஏனெனில் எந்தக் கருவிலும் எந்த உலகத் தலைவனும் பிறக்கலாம்.
சுருக்கமாகச்   சொல்லப் போனால்  ‘மொசப் புடிக்கற   நாய மூஞ்சியப் பாத்தாலே   தெரியும்’ என்னும் பழமொழி இங்கே செயல் ஆகாது. ஆகவும் கூடாது.
சித்திரமும்   கைப்பழக்கம் என்று சொல்றோம். சித்திரம்   மட்டும் இல்லை ,   எல்லாக் கலைகளுக்குமே இது பொருந்தும். பிறவிக்கலைஞர்கள்   மிகக் குறைவு. மற்றவர்கள்   எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி மேலே வந்தவர்கள்தான். அதற்குத் தேவையான காலத்தையும் வாய்ப்பையும் நாம் கட்டாயம்  தர வேண்டும்.
எழுதுபவனின்  தனிமனித குணத்துக்கும் எழுத்துக்கும்   தொடர்பு இருக்க வேண்டும் என்ற கட்டாயம்  எதுவும் இல்லை. இருக்கலாம், இல்லாமலும் போகலாம். (ஒரே எழுத்தாளர் சொந்தப் பெயரில் ஆன்மீக நூலும், புனைபெயரில்   காமரசம் சொட்டும் மர்ம நாவலும் எழுதியது உண்டு.)
ஆனால் எழுத்தாளனுக்கு   (எல்லாக் கலைஞர்களுக்கும்   தான்) ஒரு தார்மீகக் கடமை இருக்கிறது. சமூகம்  என்பது   காட்டாறு. எழுதுபவன் என்பவன் ஒரு மரம்.  மழைக்கும்  அவன் காரணமாக இருக்க வேண்டும், அதே நேரம் மழை அதிகமாகி வெள்ளம் வரும்போது மண் அரிக்காமலும் ,   கரை உடையாமலும் அவன்தான் காப்பாற்ற வேண்டும்.
இதை ஏன் சொல்கிறோம் என்றால், பொதுவுடைமை  என்னும் தத்துவம் நடைமுறைக்கு வந்ததற்கு எழுத்துதான் காரணம். அந்த   எழுத்துத்தான் லெனின் மாதிரியான ஆட்களைத்   தூண்டி புரட்சி செய்ய வைத்தது.
ஆனால் புரட்சி நடந்து ஆட்சி   கைக்கு வந்ததும், எழுத்தாளன், மண் அரிக்காமல் காப்பாற்றும் மரம் போல் இல்லாமல் போனதால்தான் ஸ்டாலின் காலத்தில் சர்வாதிகாரம் தலை தூக்கி,   யார் என்ன எழுத வேண்டும்,   என்ன எழுதக்கூடாது என்று  கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்கிற அளவுக்குப் போய்விட்டது. கட்சிக்கு (ஸ்டாலினுக்கு)ப்    பிடித்தது போல எழுதவில்லை என்றால்  சைபீரிய ஜெயில்தான்.   ஒருவேளை புகழ் அடைந்த எழுத்தாளனாக இருந்தால் விஷம்   வைத்துக் கொல்வார்கள் (கார்க்கி).
எழுத்தாளனின் படைப்பு எப்படி  மக்களால் உதாசீனம் செய்யப்படுகிறது என்பதை விவரிக்கும்  கவிதை ஒன்று தமிழ்-ஓடையில்  உள்ளது. அந்தக் கவிதையைக் கீழே தருகிறேன்.
மழை-7,துளி-2 : கவிதைப் புத்தகம்கைகாட்டி
மளிகைக் கடனுக்காய்
ஒதுக்கி வைத்திருந்த போனசுடன்,
ஒதுங்க இருந்த ஒரே குடிசையும்
கவிதைப் புத்தகமாய் உருமாற,
நான் மட்டுமே வாசகனாகி ,
ஏதோ பத்திரிக்கையில்
நான்கு வரி மதிப்புரை படித்தபோது
புரிந்தது,
அவரும் படிக்கவில்லையென.
பத்து ரூபாய்க்கு பயந்து
பலரும் திருப்பிக் கொடுக்க,
இலவசமாய்க்   கொடுத்தவை
அறுபது ரூபாய் பீருக்கும்,
பிளாக்கில் நூறு ரூபாய் காமசூத்ரா டிக்கெட்டுக்கும்
அலைமோதிய கனவான்களின்
கால்களில் மிதிபட,
‘ இன்னங் கொஞ்சம்
அகலமான பேப்பரில்
போட்டிருக்கக் கூடாதா ?   ‘
அங்கலாய்த்தவாறே,
குழந்தையின் அசிங்கத்தைத் துடைத்தெறிந்தாள்
அன்பு மனைவி.
( கவிஞர் சகாராவுக்காக)
Tag: [தினம் ஒரு கவிதை-716   (14-03-2002)]##(11-ஆகஸ்ட்-1998)
 ———–
எழுத்து, எழுத்தாளன், தமிழ் இலக்கியம் தொடர்பாக  மேலோட்டமான  கருத்துக்களை இதுவரை பார்த்தோம். அடுத்த பகுதியில் இருந்து  தனிப்பட்ட நூல்களை எடுத்துக்கொண்டு  அவை தனிமனித / சமுதாய  நடைமுறைகளை  ஒட்டி /வெட்டி  எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.
[தொடரும்]
 -துடிமன்னன்

Tagged: , , ,

2 thoughts on “நூல்கள் நுகர்வோம் -6

  1. […]  நூல்கள் நுகர்வோம்-6 […]

  2. […] நூல்கள்     நுகர்வோம்-6 […]

Leave a comment