Category Archives: சமூகம்

நூல்கள் நுகர்வோம் -9

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

நூல்கள்     நுகர்வோம்-1 நூல்கள்     நுகர்வோம்-2 நூல்கள்     நுகர்வோம்-3
நூல்கள்     நுகர்வோம்-4 நூல்கள்     நுகர்வோம்-5 நூல்கள்     நுகர்வோம்-6
நூல்கள்     நுகர்வோம்-7 நூல்கள்     நுகர்வோம்-8
சென்ற பகுதியில் உழைப்பைப் பற்றி, ‘சப்தக் குழல்’  என்ற   சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் இன்னொரு கதை பற்றிச் சொல்லி இருந்தேன்.
‘மண்’  என்ற   தலைப்பில் இருக்கும் ஏழாவது கதைதான் அது.
ஒரு   வயது முதிர்ந்த ஏழைக் குயவர். மண் சட்டி செய்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.  பிளாஸ்டிக் வந்து பிழைப்பைக்   கெடுத்தபின்னாலும் வேறு வழியில்லாமல், தொழிலைத்   தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்.
ஒரு   நாள் , வண்டி நிறைய மண் சட்டிகளைப் போட்டுக்கொண்டு ஊர் ஊராகப் போய் ஒன்றும் விற்காமல்   நொந்து கிடக்கிறார்.   அப்போது ஒரு திரைப்படப் படப்பிடிப்பு   நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாக்காரன் ஒருவன் , இவரிடம் வந்து , சண்டைக்காட்சியில் உடைப்பதற்காக   எல்லாப் பானைகளையும் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறான்.
பெரியவர்   முடியாது என்று   சொல்லி விடுகிறார். கூட இருக்கும் பேரன் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.
ஏன் என்று கேட்கிறான் சினிமாக்காரன். இப்போது வசனத்தைப் பாருங்கள்.
“நீங்க   பானை சட்டிய உடைக்கறதுக்காகக் கேக்கறீங்க”  என்கிறார்   பெரியவர்.
“என்னைக்குனாலும்   உடையப்போறதுதானே?” என்கிறான்   சினிமாக் காரன்.
“மனுஷங்கூடச்   சாகப் போறவன் தான், அதுக்காகக் கொல்லுவமா? “ – பெரியவர்.
“கொள்ளி   வெக்கறதுக்கு நீங்க விக்கறது இல்லையா?” – சினிமாக்   காரன்.
“யாரும்   ஒரு வண்டிக் குடத்தை கொள்ளி ஒடைக்கறதில்லீங்க” என்று சொல்கிற பெரியவரை விநோத ஜந்து மாதிரிப் பார்த்துவிட்டுப்   போகிறார்கள்   சினிமாக்காரர்கள்.
கடைசியில் பானைகள் விற்காமல் , வண்டியைத் திருப்பிக்கொண்டு வெறும் பையோடு/ வயிறோடு   வீட்டுக்குப் போகிறார்   பெரியவர்.
பெரியவரைப்   பொறுத்தவரைக்கும் பானை / குடம் என்பது   ஒரு பொருள் அல்ல. அது அவருடைய வியர்வை – உழைப்பு. அதனை உபயோகத்துக்காக இல்லாமல் அழிக்கப்படுவதற்காக வாங்கப்படுகிறது என்று தெரியும்போது அவர் விற்கத் தயாராக இல்லை – வயிறு   காலியாக   இருக்கும்போது கூட.
மற்றோர் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதையைப் பார்ப்போம்.
எல்லா   ஆணுக்கு உள்ளேயும்   ஒரு மிருகம் இருக்கிறது. நாம் இன்னும் ஆடை கட்டிய மிருகமாகத்தான் இருக்கிறோம். அந்த   மிருகத்தின் ஆசைதான் பெண்களை நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்ற வெறி.
இந்த   மாதிரியான மனிதர்களின் மட்டமான மனதைப் பற்றி ஒரு   கதை இருக்கிறது.
“நிர்வாணம்” என்ற பெயரில் ஒரு   சிறுகதைத் தொகுப்பு, உடுவை தில்லை நடராசா என்ற ஈழத்து   எழுத்தாளர் எழுதியது. அதில் ஆறாவது கதை –“நிர்வாணம்”
இரண்டு   இளைஞர்கள் சினிமாப் பார்க்கப் போகலாம் என்று   திட்டம் இடுகிறார்கள்.   தெருவில் வரும்போது   அம்மணமான ஒரு சிறுமி பிச்சை கேட்கிறாள்.
“பெரிய   கன்றாவியாக இருக்கு; அன்சகிக்கெபிள்”  என்று அருவருப்பு   அடைகிறார்கள் இளைஞர்கள்.
பிச்சை   கேட்கும் சிறுமியைத் துரத்தி அடிக்கறார்கள்.   அவள் விடாமல் தொந்தரவு செய்யும்போது, அவளைப் பிடித்துக் கீழே தள்ளி விடுகிறார்கள்.
“உதுகள்   உப்பிடித்தான், சில தாய் தகப்பன் தங்கடை விருப்பப்படி பெத்துத்தள்ளி   விடுகிறது…” இப்படியாகப் பேசிக்கொண்டே வரும்போது ஒரு ஆபாச ஆங்கில சினிமா   போஸ்டர் கண்ணில் படுகிறது.
“எப்பிடி   மச்சான், நல்ல படமா?” – ஒருவன் கேட்கிறான்.
“பைன்   ஷோவா இருக்கும் மச்சான். லாஸ்ற்   வீக் நான் ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தபோது சோர்ட்ஸ் போட்டுக் காட்டினவங்கள். ஹீரோயின் புல் நேக்கட்லை   ஒரு டான்ஸ். ஃபைன் மச்சான் ஃபைன்.”
“போன   மாதமும் அவளின்ர படமொண்டு பார்த்தனான். அவளின்ர   நேக்கட் டான்ஸ் பார்த்தாலே போதும், அதுக்கே   காசு குடுக்கலாம்”
என்கிறான் அடுத்தவன்.
“சரி மைச்சான்; றையுமாகுது.   கெதியாக நட; இல்லாட்டி டிக்கட்   எடுக்கேலாது”
இரண்டு பேரும் அவசரமாகத் தியேட்டருக்கு ஓடுகிறார்கள், “ஆபாசம், அன்சகிக்கெபிள்” என்று   கொஞ்ச நேரம் முன்னால் சொன்னதை மறந்துவிட்டு.
புத்தக   விவரம்:
தலைப்பு நிர்வாணம்     (சிறுகதைகள்)
எழுதியவர் உடுவை.     தில்லை நடராசா
பதிப்பகம் நியூ     செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
உரிமை ஆசிரியர்
முதல்     பதிப்பு அக்டோபர்-1991     (இலங்கை),2-ஆம்     அச்சு: பிப்-1994
ISBN 81-234-0247-3
விலை 20/-     (இருபது)
அணிந்துரை இல்லை
கிடைக்கும்     இடம் http://www.noolulagam.com/product/?pid=1721
தொடரும்.
துடிமன்னன்  

நூல்கள் நுகர்வோம் -8

முந்தைய   பதிவுகளுக்கான சுட்டிகள்:

 நூல்கள் நுகர்வோம்-1  நூல்கள் நுகர்வோம்-2  நூல்கள் நுகர்வோம்-3
 நூல்கள் நுகர்வோம்-4  நூல்கள் நுகர்வோம்-5  நூல்கள் நுகர்வோம்-6
 நூல்கள் நுகர்வோம்-7
உடல் உழைப்பைக் கேவலமாக நினைக்கும் மன நிலையை முந்தைய பதிவில்   பார்த்தோம். இந்த மன நிலையை ஏற்படுத்துவதில் பெற்றோர்தான் முன் நிற்கிறார்கள்.  அவர்கள் சொல்வது என்ன?  “நான் படற கஷ்டம் நீ படக்கூடாது”
பள்ளியில் ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? “நல்ல   மார்க் வாங்கலைன்னா ஆடு மேய்க்கப் போகணும்”. எந்த   மிருகத்தை மேய்ப்பது என்பது ஊர் ஊருக்கு / ஆசிரியரைப் பொறுத்து மாறும். சில ஊர்களில் கழுதை, சில ஊர்களில் எருமை, சில ஊர்களில் பன்றி.
மொத்தத்தில் எல்லா அறிவுரைகளுக்கும்   பொருள் என்னவென்றால்,
உடல் உழைப்பு கேவலமானது,
படிப்பதன் மூலமாதைத் தவிர்க்கலாம்.  
வேர்வை வெளியே வராமல் இருப்பதுதான்   நாகரீகம்.
இந்த மனநிலை இருப்பதனால்தான், காலையில் பனியன், ஜட்டி   நனைய இரண்டு   கிலோமீட்டர் வாக்கிங் / ஜாக்கிங் போவது இவர்களுக்கு நாகரீகமாகத் தெரிகிறது, அதே   சமயத்தில் வீட்டில்  இருந்து 300 அடி   தூரத்தில் இருக்கும் கடைக்கு ஹோண்டா சிட்டி காரில் ஏசி போட்டுக்கொண்டு சென்று, நடுச் சாலையில் பார்க்கிங் செய்து டிராபிக் ஜாம் ஆக்கி, ஒற்றை சிகரெட் வாங்கிக்கொண்டு வருவார்கள். ஏனெனில்   நடந்து போனால் அது கேவலம்.
வயதுப் பையன், மதியம்   ஒரு மணிக்கு உச்சி வெய்யிலில் வேர்க்க   விறுவிறுக்க மைதானத்தில்   கிரிக்கெட் விளையாடுவான். அதே பையனை, ‘கண்ணா, எண்ணெய்   தீந்துடுச்சு, மொக்குக் கடைல போய் கொஞ்சம் வாங்கிட்டு வாடா”  என்று   அனுப்பிப் பாருங்கள். “போம்மா, ஒரே   வெய்யிலா இருக்கு, நம்மாள ஆகாது”  என்பான்.
நன்றாகப் பாருங்கள், ஒரே சூழ்நிலைதான். வாக்கிங்   / ஜாக்கிங் என்ற பேரில்  செய்தால் அது   நாகரீகம். அதே செயலை, ஒரு வேலையாக / வேலைக்காக செய்வதென்றால் அது அசிங்கம்.
நான்   ஏதோ கல்விக்கு எதிரானவனோ, எல்லாரையும் படிப்பதை விட்டுவிட்டுக் கோவணம் கட்டிக்கொண்டு (இப்பொது எல்லாம் பெர்முடாஸ்தான்)   ‘மண்ணைக் கொத்துங்கடா’ என்று சொல்கிற பழமைவாதியோ இல்லை. படிப்பது என்பது வேறு. அதை அறிவுக்காக செய்கிறோம். உழைப்பு என்பது வேறு.  இரண்டையும்   குழப்பிக்கொண்டு, ‘வொயிட்காலர் வேல கெடச்சாத்தான் போவேன், இல்லைன்னா   உக்காந்து கெடப்பேன்’  என்று   உருப்படாமல் போகிற  இளைஞர்களைப்   பற்றித்தான் கவலைப் படுகிறேன்.
இன்னும்    ஆழமாகத்   தோண்டிப் பார்த்தால் (சமுதாயத்துல   இருக்கும் எந்தப் பிரச்சினையத் தோண்டினாலும்)   நாறிக்கொண்டு   இருக்கும் ‘சாதி’ப் பிணம்தான் வெளியே வருகிறது.
வெளிப்படையாகச் சொன்னால்.   இப்போது எல்லோருக்கும் அவாளாக மாற ஆசை. முன்பு  இது குறைவாக இருந்தது. இப்போது அதிகமாக ஆகிவிட்டது.   அவாள் என்ன எல்லாம் செய்கிறார்களோ   அது எல்லாம் நாகரீகம், அதைக் காப்பி செய்தால்தான் நாமும் “மேலே “ வந்ததாக அர்த்தம் என்று நினைக்கிறார்கள். (அவாளுக்கு, அமெரிக்காக்   காரன் என்ன செயகிறானோ அவை எல்லாம் நாகரீகம்)
வெள்ளையாக இருந்தால் நாகரீகம்;  ஆங்கிலம்   கலந்து பேசுவதுதான் நாகரீகம்; வேர்வை   வராமல் இருந்தால் நாகரீகம்; காரில் போனால்   நாகரீகம்; வெளிநாடு போனால்   நாகரீகம்; கல்யாணத்தில் பந்தியில் 16 வகையான உணவுகளை வைத்துத் தின்ன   முடியாமல் கொண்டுபோய்க்   குப்பையில் கொட்டினால்   நாகரீகம்,…
கறுப்பாக இருந்தால் அசிங்கம்;  அரசுப் பள்ளியில்   படித்தால் அசிங்கம்; கம்பு, சோளம், ராகி   மாதிரியான சிறு   தானியங்கள் தின்றால் அசிங்கம்; வேர்த்தால் அசிங்கம்; மழையில் நனைந்தால்   அசிங்கம்; நடந்து போனால்   அசிங்கம்; மண் காலில்   பட்டால் அசிங்கம்; ‘எங்க   அப்பா விவசாயி’ என்று   சொன்னால் அசிங்கம்; சோற்றை விரயம் செய்யாமல் முழுதாகச் சாப்பிட்டால் அசிங்கம் (தரித்திரம் என்று நினைப்பார்களாம்); ‘சோறு’ என்று சொன்னால் அசிங்கம் (‘சாதம்’ என்று   நாகரீகமாகச் சொல்ல வேண்டும்!);……..
சமூகத்தின் அடித்தட்டில் பிறந்து, படித்து முன்னேறிய 99% பேர்   என்ன செய்கிறார்கள்? தங்களின் சொந்த பந்தங்களில்  இருந்து பிய்த்துக்   கொண்டு, முன்னேறிய வகுப்புகளுடன் போய்   ஒட்டிக்கொள்கிறார்கள்.   திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.   தான் இந்த (தாழ்த்தப்பட்ட) சாதியில் பிறந்தவன்    என்னும் கறையை எப்படியாவது வெட்டி எறிந்து விடவேண்டும் என்று நினைத்து, இன்னும் பழைய   நிலையிலயே இருக்கும் தன்னுடைய மற்ற உறவுகளை   ஒண்டக்கூட விடுவதில்லை.   எவ்வளவு தூரம் தள்ளிப்போக முடியுமோ   அவ்வளவு தூரம் தள்ளிப் போய்விடுகிறார்கள்.   வாய்ப்புக் கிடைத்தால், உயர்சாதிப்   பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சாதி   மாறிவிடுகிறார்கள்!
“விதிக்கு   விதி”  என்ற சிறுகதைத்   தொகுப்பைப் பற்றி போன பதிவில் பார்த்தோம்.   மேலே சொன்ன   சிச்சுவேஷன் தொடர்பாக அதில் ஒரு கதை, “ஒதுக்கீடு” என்ற தலைப்பில் இருக்கிறது.
கதைச்   சுருக்கம்:
ஒரு   தாழ்த்தப்பட்ட சாதி -ஏழைப் பையன், கஷ்டப்பட்டு   உழைத்துப்   படித்து, முன்னுக்கு   வந்தவன். பொறியியல் தேறி, நல்ல சம்பளத்தோடு   வேலையும் கிடைக்கிறது.   அவனைப் பற்றி  நன்றாகத் தெரிந்த   உயர்சாதிக்காரர் ஒருவர் இருக்கிறார். பரந்த மனசுக்காரர்.   சாதி-சமய பேதம் பாராட்டாத ஆள். அந்தப்   பையனுடைய சின்ன வயதில்   இருந்தே அவனுக்கு ஏறக்குறைய ஒரு வழிகாட்டியாக அவர்   செயல்படுகிறார்.   அவருக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அந்தப்   பையனின்   நேர்மை , உழைப்பைப் பார்த்துவிட்டு, தன் பெண்ணை ஏன் அவனுக்கே மணம் செய்து வைக்கக் கூடாது என்று யோசிக்கிறார்.   அந்த விருப்பத்தை அவனிடம் சொல்கிறார்.   அப்போது அந்தப் பையன்   சொல்கிற வசனத்தைக் கீழே தருகிறேன்.
ரொம்ப நன்றி சார். நீங்க   என் மேல் வைத்திருக்கும் அன்பு, மதிப்பு   எல்லாவற்றிற்கும் நன்றி சார்.   ஆனா….
உங்க அன்பு பல விஷயங்களை உங்க கண்ல   இருந்து மறைச்சிடுச்சு சார்.
நீங்க மொத்தமா முன்னேறிட்ட சமூகம். நீங்க   சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசலாம். நாங்க ரொம்ப பின்னடைஞ்ச சமூகம் சார். சாதிங்கற   விஷயம்தான் எங்களுக்கு   மேலே வர்றதுக்கான ஒரே ஐடன்டி.
உங்க பொண்ணுக்கு உங்க சமூகத்துல   இருந்தே இஞ்சினியர் மாப்பிள்ளை கிடைப்பான். ஆனா   என்னை மாதிரி சமூகத்துல பிறந்து, சாதி   ஒதுக்கீட்டுல இடம் வாங்கி படிப்பு முடிச்சதும், சாதி   ஒழிக்கறேன் பேர்வழின்னு முன்னேறுன சமூகத்துல பொண்ணு எடுத்துக்கிட்டு   ஒதுங்கிட்டா, எங்க   சமூகத்துப் பொண்ணுங்களுக்கு எப்போ சார்   இஞ்சினியர், டாக்டர்   மாப்பிள்ளைங்க கெடைப்பாங்க?”
இதே கருத்தைத் தொடுகின்ற   இன்னொரு சிறுகதை இருக்கிறது. இந்தக் கதையை எழுதியவர்   சந்திரகாந்தன் என்ற எழுத்தாளர்.
இந்தக்   கதை , ‘சப்தக் குழல்’  என்ற   சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது. கதையோட பெயரும், தொகுப்போட   பெயரும் ஒன்றுதான். இந்தத் தொகுப்பில் மொத்தம் ஒன்பது கதைகள் இருக்கின்றன. அதில்   ஆறாவது கதையைப் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
வட்டன்   என்ற பெயரில் ஒரு தலித். சப்தக்குழல் என்ற ஒரு  இசைக்கருவியை   வாசிப்பதில்  கெட்டிக்காரர்.   இவரோட வாசிப்பில், புதிதாக ஊருக்குள்   வந்த மருதநாயகம் என்ற ஒரு   உயர்சாதிக்காரர்க்குக் காதல் வருகிறது. இரண்டு பேரும்   நண்பர்களாகிறார்கள்.
மருதநாயகம்   கொடுத்த அறிவுரையால் , வட்டன்   தன் மகனைப் படிக்க வைக்கிறார்,  மகன் உதவிப்   பேராசிரியர் ஆகி விடுகிறான்.
உதவிப் பேராசிரியர் ஆன   கையோடு தன் ‘கருப்பன்’ –என்ற பெயரை , கே.அப்பன்    என்று மாற்றிக் கொள்கிறான். படித்த ஒரு அய்யராத்துப் பெண்ணைத் திருமணம்  செய்துகொண்டு, ஊரில் இருந்தும், தன்னுடைய உறவுகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்கிறான்.
தான்   ஒதுங்கியது மட்டும்   இல்லாமல், தன்னுடைய தந்தையும் ஒதுங்கிக் கொள்ல வேண்டும்   என்று கட்டாயப்படுத்துகிறான்.   முக்கியமாக, வட்டன், தனக்கு   விருப்பமான அந்த சப்தக்குழலை  எடுத்து வாசிக்கக் கூடாது என்று தடை போட்டு வைக்கிறான்.   அவனைப் பொறுத்தவரை   அதை வாசிப்பது என்பது அவமானம்,   இழிவுக்கு அடையாளம்.
இந்த   சூழ்நிலையில், மருத   நாயகம், தனது இறுதி   ஊர்வலத்தில், வட்டனுடைய சப்தக்குழல் கேட்க வேண்டும் என்று வட்டனிடம் ஒரு சத்தியம் வாங்கி  வைக்கிறார்.
மருத   நாயகம் செத்துப் போகிறார், இறுதி   ஊர்வலத்தில் வாசிப்பதா இல்ல மகனுக்கு பயந்து பேசாமல் இருப்பதா என்ற மனக்குழப்பத்தில் வட்டன்   கஷ்டப்படுகிறார்.
கடைசியில் வாசிப்பது   என்று முடிவு செய்து, தன்னுடைய மற்ற உறவினர்களோடு சேர்ந்துகொண்டு   வாசிக்க ஆரம்பிக்கும்போது, மகன்   வந்து தடுக்கிறான்.   அப்போது அவனை சமாதானப் படுத்துகிற இன்னொரு இளைஞன் (மருதநாயகத்தின்   உறவினன்) சொல்கிற வசனத்தைப் பாருங்கள்.
உங்க அப்பா வாசிக்கறத மட்டும்   நிறுத்தணுனு நெனைக்கற   நீங்க, உங்களோட மற்ற உறவினர்களைத்   தடுக்கலியே. அது ஏன்?
நீங்க மட்டும் இல்லை , உங்கள   மாதிரி பலபேர், படிப்பைக் கொண்டோ, பணத்தைக்   கொண்டோ மேல் வந்த பின்பு, தன்னையும்   தன் குடும்பத்தச் சேந்தவங்களயும்   மட்டும் அடிமைத்தனம், இழிவு   இதியாதிகள்ள இருந்து விடுவிச்சுட்டாப் போதும்னு   நெனைக்கறாங்க.
இன்னும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அதே   சகதியில் உழன்று   கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பற்றி அவங்க கவலைப் படுறதே இல்லை.   அவங்க மட்டும் பிறரோடு சமமா உட்கார்ந்துட்டாப் போதும், மேல்   ஜாதிக்காரங்க மத்தியில அந்தஸ்தோடு   உலவி வந்திட்டாப் போதும்னு நெனைக்கறாங்க.
தங்களைச் சார்ந்தவங்களை விட்டு   விலகிப் போகத்தான் விரும்புறாங்க.   ஏதோ இவங்களோடு தங்களுக்குச் சம்பந்தமே இல்லைனு காட்டிக்க முயற்சி   பண்றாங்க. தன் பழமைய   மறந்துட்ட மாதிரி, அத   நினைவூட்டவே விரும்பாத மாதிரி நடந்துக்கறாங்க.
அப்போது   கே.அப்பன் , “அப்போ இந்தத் தொழில் இழிவு இல்லைன்னு   சொல்ல முடியுமா” என்று கேட்கிறான். அதற்கு பதில் சொல்கிறான் அடுத்தவன்.
தொழில்ல   எது இழிவு? அப்படீன்னா   உழைப்பே இழிவா? உடல்   உழைப்பு இழிவுன்னு கருதிய ஒரு காலகட்டத்தின் கருத்தோட்டம் அது. உழைக்காமல்   உட்கார்ந்து சாப்பிடுவதே   உன்னதம் என்று கருதப்பட்ட காலத்தின் கண்ணோட்டம் அது.
இப்படியே   நீளமாகப் போகிறது, வசனம்.
முழுமையாகப் புரிந்துகொள்ள, கதையைப் படித்தால்தான்   நன்றாக இருக்கும்.   தமிழ்நாட்டில் இருக்கும் நூலகங்களில் இந்தப்   புத்தகம் கிடைக்கும். இதே தொகுப்பில் இருக்கும் மற்ற கதைகளையும் படியுங்கள்.
தலைப்பு சப்தக்குழல்
எழுதியவர் சந்திரகாந்தன்
பதிப்பகம் நியூ     செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
உரிமை ஆசிரியர்
முதல்     பதிப்பு ஆகஸ்ட்-1994
ISBN 81-234-0284-8
விலை 22/-     (இருபத்து இரண்டு)
அணிந்துரை இல்லை
கிடைக்கும்     இடம் http://www.noolulagam.com/product/?pid=1692

-உழைப்பைப் பற்றி, இதே   தொகுப்பில் இன்னொரு கதை இருக்கிறது, அதனை அடுத்த பதிவில் பார்ப்போம்.

[தொடரும்]

-துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -7

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

  1. நூல்கள் நுகர்வோம்-1
  2. நூல்கள் நுகர்வோம்-2
  3. நூல்கள் நுகர்வோம்-3
  4. நூல்கள் நுகர்வோம்-4
  5. நூல்கள் நுகர்வோம்-5
  6. நூல்கள் நுகர்வோம்-6
ஒருநாள்   மழை பெய்து  ஓய்ந்த நேரத்தில்  நானும்   நம் நண்பர் ஒருவரும் வண்டியில் போய்க் கொண்டு இருந்தோம். அந்த வழியில் ஒரு மரக் கிடங்கு இருக்கிறது. பெரிய பெரிய மரங்களை அங்கே  இருப்பு வைத்திருப்பார்கள். ஒரு   பக்கத்தில் மரத்தைப் பிளந்துகொண்டு இருப்பார்கள். இன்னொரு புறத்தில் மரத்தை வண்டியில்   ஏற்றி அல்லது இறக்கிக் கொண்டு இருப்பார்கள்.
நாங்கள்   போன நேரத்தில்  40 வயதுள்ள ஒருவர் மரம் உடைத்துக் கொண்டு இருந்தார். வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்த நம்   நண்பர் , “அய்யோ, பாவம்.   இப்படிக் கஷ்டப்படுறாரே “  என்று   சொன்னார். நானும் , “ஆமா, கஷ்டந்தான்”  என்றேன்.
அந்த   நேரத்தில் நான் அப்படிச் சொன்னாலும், நான்   சொன்னது சரிதானா, உடலால்   வேலை செய்கிற ஒருவனைப் பார்த்துக் கஷ்டப்படுவதாக எண்ணும் எண்ணம்   சரிதானா  என்ற குழப்பம் வந்தது.
நீங்கள்   ஒரு பொதுவுடமைச் சார்பு / சிந்தனை உள்ள ஆளாக   இருந்தால், நிச்சயமாக  ‘அந்த ஆள் கஷ்டப்படுறான், அவன   சமுதாயம் சுரண்டுது ‘ என்று சொல்லி விடுவீர்கள்.   ஆனால் அதில் உண்மை இருக்கிறதா?
மேலோட்டமாகப்   பார்த்தால், நம் எண்ணம் சரி என்று தோன்றினாலும், கொஞ்சம்   ஆழமாக யோசித்தால் நம் எண்ணம் தவறு என்பது தெரிய வரும். இப்படிச் சொல்வதனால் என்னை   முதலாளித்துவ அடிவருடி என்றோ, பூர்ஷ்வா என்றோ சிலர் சொல்லலாம்.
உடல்   உழைப்பு எனக்கு ஒன்றும் புதியது கிடையாது. நான்   விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ஏர் ஓட்டுவது தவிர மீதி எல்லா விவசாய வேலைகளையும்   செய்திருக்கிறேன். பத்தாவது படிக்கும்போது கிணற்றில்  மண் அள்ளி இருக்கிறேன்.   (அப்போது 20 ரூபாய் சம்பளம் கிடைத்தது). கிணற்று   மண் ஈரமாக இருக்கும். அதை சுமப்பது எவ்வளவு கஷ்டம்  என்பது சுமந்தவர்களுக்குத்தான்  தெரியும்.
இந்த   வரலாறெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், நான்   இப்படியெல்லாம் உழைத்திருக்கிறேன் என்று பீற்றிக் கொள்வதற்காக அல்ல. உடல் உழைப்பைப்   பற்றிக் கருத்து சொல்வதற்கு எனக்குத்  தகுதி இருக்கிறது என்பதை உணர்த்தத்தான்.
நன்றாக   யோசித்துப் பார்த்தால், நம் உடம்பே, உடல்   உழைப்புக்கு ஏற்றவாறுதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொழிற்புரட்சி வந்து   எல்லாம் இயந்திரமயமாக ஆகிற வரைக்கும் (இந்தியாவில் 1970-75   வரைக்கும்) , கிராமத்தில்   எல்லோருமே  விவசாய வேலைகள் செய்து உடல் உழைப்பால்தான் வாழ்ந்துகொண்டு   இருந்தார்கள்.
15-20 ஏக்கர்   நிலம் இருக்கிற பண்ணையாராக இருந்தாலும், அவர்களின் மொத்த   குடும்பமும், மற்ற வேலைக்காரர்களோடு சேர்ந்து நிலத்தில் இறங்கி வேலை   செய்வார்கள்.   மத்திய தரக் குடும்பத்தில் சைக்கிள்   இருப்பதே லக்சரியாக இருந்த காலம் அது.  அப்போது யாராவது “அய்யோ, வெய்யில்ல   கஷ்டப்படுறமே”  என்று புலம்பியது   இல்லை.
அவ்வாறு   இருந்த நிலையில்  இந்த மனமாற்றம்  எப்படி – எப்போது ஏற்பட்டது?
எப்போது, பணம்   இருப்பவன் உடம்பை வளைத்து உழைக்கத் தேவையில்லை, படித்தவன்   குனிய நிமிரத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டதோ, அப்போதே   உழைப்பு  என்பது கேவலமானது, வேறு   வழி இல்லாத ஏழைகளுக்கானது  என்ற எண்ணம் வர   ஆரம்பித்தது. காட்டை விற்றாவது கார் வாங்கி  புகை விட்டுக்கொண்டு (அடுத்தவன்   மனதிலும்தான்) போக வேண்டும் என்ற எண்ணம் வலுவாக ஏற்பட்டு விட்டது.
வெய்யிலில்   போய்க் காட்டில் இறங்கி வேலை செய்வது கேவலம்   என்று  எல்லாரும் நினைக்க ஆரம்பித்தார்கள். சம்பளம்  குறைவாக இருந்தாலும்   பஸ் ஏறி நகரத்துக்குப் போய் சாயப்பட்டறையில் 10 மணி   நேரம் சந்தோஷமாக வேலை செய்துவிட்டு வந்த   நபர்களை நான் அறிவேன். ஏன் என்று கேட்டால் அதுதான் நாகரீகம் என்று பதில்   சொன்னார்கள்.
உடல்   உழைப்பு கேவலமானது, அதிலும், வெய்யில்   மழையில்  நின்று வேலை பார்ப்பது அதை விடக் கேவலமானது, விவசாயம்   பார்ப்பது மகாக் கேவலமானது  என்ற விஷக் கருத்து மிக வேகமாகப் பரவிவிட்டது. (முக்கியமாக 1980-க்குப் பின்னால்.)
நல்ல   வாய்ப்பு, தண்ணீர் வசதி இருந்த விவசாயிகூட, தன்   பிள்ளைகள் மண்ணில்  இறங்கிக் கஷ்டப்படக்கூடாது  என்று  சொல்லிச் சொல்லி  மூளைச் சலவை செய்து  ஃபைனான்ஸ் , ரியல் எஸ்டேட் என்று திருப்பி விட்டார்கள்.
கல்வி   அறிவை அதிகரிக்க வேண்டும்  என்ற அரசாங்கத்தின்  திட்டம்   இருமுனைக் கத்தியாக மாறி விட்டது. படித்தவர்கள் எல்லாம், தாங்கள்  சமுதாயத்தில்   “மேலே” வந்துவிட்டதாகவும்,    இனி  உடல் உழைப்பு செய்வது அசிங்கம் என்றும் எண்ணத் தலைப்பட்டனர்.
படித்த   ஏழையும் நகரத்தை நோக்கித்தான் ஓடுகிறான்.
 “படித்த”  என்று சொன்னால்  ஏதோ டிகிரி படித்தவன் என்ற அர்த்தம்  கிடையாது. 8-ஆவது   ஃபெயில் ஆகி இருந்தாலும், ‘சார்’ வெயிலுக்கு வரமாட்டார்.  நிழலில்தான் வேலை பார்ப்பார்.   அப்படி ஒரு வேலை  கிடைக்கவில்லை என்றான், ‘அப்பன்   ஆயி’ காசில், உட்கார்ந்து தின்று கொண்டு, ஏதாவது ஒரு   நடிகனுக்கு ரசிகர் மன்றம் வைத்துக்கொண்டுக் காலத்தை ஓட்டுவார்.
நம்  குழந்தைகள் படிக்கும் பாடத்திட்டமே விவசாயத்தை அங்கீகரிக்கவில்லை.   விவசாயம் ஒரு பாடமாக இல்லை. உயிரியல் பாடத்தில் வருகின்ற முக்கால்வாசித் தாவரங்கள்   இந்தியாவில்  கிடையாது. நாம்  தினமும் உண்ணும் தக்காளி, அரிசி, கத்தரிக்காய்   இதெல்லாம் எப்படி வளர்கிறது  என்று  பாடப்புத்தகத்தில் கிடையாது.
கேரளாவில்   “பணி கிட்டி”  என்றொரு சொற்றொடர் இருக்கிறது. ஏதாவது சிக்கல் உருவானால் , கொஞ்சம்   சிரமமான  நிலை ஏற்பட்டால்  இந்த வார்த்தையை உபயோகம்   செய்கிறார்கள். (எடுத்துக்காட்டாக, வண்டி ஓட்டிப்   போய்க்கொண்டு இருக்கும்போது  சாலையில் டைவர்சன்   போர்டு  வைத்து இருந்தால் – அதனால் வழி மாற்றிப் போக வேண்டி வந்தால் / பக்கத்து   சீட்காரன் விடுமுறையில் போய், அவனுடைய   வேலையை அவசரமாகச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்).
“ பணி கிட்டி”  என்ற   வார்த்தைக்கு நேரடி அர்த்தம் “வேலை   இருக்கு”/ “வேலை   வந்து விட்டது”. இந்த   வார்த்தைப் பிரயோகத்துக்குப் பின்னால் ஒரு   சமூகத்தின்  மனப்போக்கே  அடங்கி இருக்கிறது.
இதனால்   புரிய வேண்டியது என்னவென்றால்,  எப்போதெல்லாம் செய்வதற்கு   ஏதாவது வேலை இருக்கிறதோ, அப்போது நாம் சிரமத்தில் இருக்கிறோம் (!?). நோ   வெலை, நோ சிரமம். இதனால்தான் கென்யாவில்  கேக் கிடைக்கவில்லை என்று   ஸ்ட்ரைக்  செய்தால், அதற்கு ஆதரவாக  கேரளாவிலும்   ஸ்ட்ரைக் செய்கிறார்கள். முக்கியமாக வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைதான்   ஸ்ட்ரைக் நடக்கும். வியாழக்கிழமை அன்றைக்கு மதியத்தில்   இருந்தே சாராயக்கடையில் கூட்டம் தள்ளி   வழியும்.
‘நூல்கள் நுகர்வோம்’ தொடருக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன தொடர்பு  என்று நீங்கள் முனகுவது   கேட்கிறது.  தொடர்பு இருக்கிறது, அதை விளக்கமாகப் பார்ப்போம்.
பி.என்.மாறன்   என்ற எழுத்தாளர் பெ.நாயகி  என்ற புனை பெயரில்   நிறையக் கதைகள் எழுதி இருக்கிறார். அவருடைய சிறுகதைத்   தொகுதிகளில்  ஒன்று  “விதிக்கு ஒரு விதி”. இது   பாவை பளிகேஷன்ஸ் வெளியிட்ட நூல். இந்த நூலில்  20 சிறுகதைகள்   இருக்கின்றன.
இந்தத் தொகுப்பில்  9-ஆவது கதை, “அவங்க உழைப்பு   பூத்திருக்கு”.  அந்தக் கதையின் சுருக்கம் என்னவென்று பார்ப்போம்:
ஒரு   பண்ணையாரிடம் கூலிக்கு வேலை செய்கிற பெற்றோர். அவர்களுக்கு   மகனாகப் பிறந்து, படித்துப்   பதவிக்கு வந்தவன் மோகன். வேலை கிடைத்ததும், தன்   பெற்றோரைத் தன்னிடம்  வந்துவிடுமாறும்  இனி கூலிக்கு உழைக்க வேண்டாம், அந்தப்   பண்ணையாருக்கு அடிமைத் தொழில்   செய்யவேண்டாம் என்றும் சொல்கிறான். பெற்றோர் கேட்கவில்லை. இதுவரை பட்ட கஷ்டம்   போதும், இனிமேல்   கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை.
அப்போது   மோகனின் மேலாளர், மோகனின் எண்ணத்தில் தவறு இருக்கிறது என்பதையும், அதனால்தான்   அவர்கள் வர மறுக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறார். அந்த உரையாடலின்  ஒரு பகுதியைக் கீழே கொடுத்துள்ளேன்.
அவர்களைப்   பொறுத்தவரையில் ஒரு நோக்கத்தோடு உழைத்தார்கள். உனக்கு   எப்படி இந்த அலுவலகமோ அதே மாதிரி, அவங்களுக்கு   அந்தப் பண்னையார் வீடு. அவர்களுடைய உழைப்பின்   பலனை உன் முன்னேற்றத்தில் பார்த்திருக்கிறார்கள். இதுதான் அவர்களுக்குத்   தேவைப்பட்டதும். இந்தத் தேவை தீர்ந்ததில், அவர்களைப்   பொறுத்தவரையில் அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கை   வாழ்ந்திருக்கிறார்கள்.
அதே   சமயம் இது நிறைவேறக் காரணமாய் இருந்த பண்ணையார் மீது நன்றி   உணர்வும் இருந்திருக்கும். அவர்களிடம் போய், நீங்க   இது வரை வாழ்ந்த மோசமான வாழ்க்கை போதும்; என்   கூட வாங்க, வசந்தம் காட்டறேன்னு சொன்னா   அவங்களுடைய இத்தனை நாள் வாழ்க்கையைக் கேவலப்படுத்தியது   ஆகாதா?
வளர்ச்சிங்கறதுக்கு   அர்த்தம் முந்தைய நிலையைக் கேவலமா நினைக்கறது   அல்ல.
இந்தக் கதையில்   முத்தாய்ப்பாக இருப்பது  அந்த கடைசி வரிதான்.
ஏதோ   நாலு எழுத்துப் படித்து, ஒரு வேலை கிடைத்து , பேப்பர்   பேனாவுடன்  மேசையில் உட்கார்ந்து, கொஞ்சம் இரத்தம் ஊறிய  உடனே, “மரம் உடைக்கறவன் எல்லாம் ‘அய்யோ   பாவம்’, கோவணம்   கட்டிக்கிட்டு விவசாயம் பாக்கறவன் எல்லாம் ஒண்ணுக்கும் ஆகாத கேனப்பயல்”- என்று   நினைக்கும் மனப்போக்கு உள்ளவன் எல்லாம் இந்தக் கதையைக்   கட்டாயம் படிக்க வேண்டும்.
உழைப்பவன் மேல் பரிதாபப் படுவது போல் நாம் நடிக்கிறோம். அவனுடைய  உழைப்பை மதிக்காமல் கிண்டல் அடிக்கிறோம்,  நம்மை அறியாமலேயே அவனோடு   ஒப்பிட்டு  நம்முடைய ஈகோவை  நாமே   நக்கிக் கொடுத்துக் கொள்கிறோம்  என்பதுதான்   உண்மை.
நூல்   விவரம்:
தலைப்பு விதிக்கு  ஒரு விதி
எழுதியவர் பெ.நாயகி     (P.N. மாறன்)மேலும் அறிய: http://ta.wikipedia.org/s/tgq
பதிப்பகம் பாவை     பப்ளிகேஷன்ஸ்,142, ஜானி ஜான் கான் சாலை,இராயப்பேட்டை, சென்னை-600     014தொ.பேசி: 28482441,28482973
உரிமை பதிப்பகத்தார்
முதல்     பதிப்பு டிசம்பர்     – 2004
ISBN 81-7735-165-6
விலை 44/-     (நாற்பத்து நான்கு)
அணிந்துரை இல்லை
கிடைக்கும்     இடம் http://www.noolulagam.com/product/?pid=1114#details

தொடரும்..

துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -4

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

  1. நூல்கள் நுகர்வோம்-1
  2. நூல்கள் நுகர்வோம்-2
  3. நூல்கள் நுகர்வோம்-3
நான் படித்த, அட்டையில்லாத புத்தகங்களைப் பற்றி முன் பகுதிகளில் சொல்லி இருந்தேன். அட்டை இல்லாத , முன் பக்கங்கள் இல்லாத புத்தகங்கள் கூடப் பரவாயில்லை. புத்தகத்தின் நடை/கதைப் போக்கை வைத்து, முன்பகுதியில் என்ன இருந்திருக்கும் என்ற ஊகம் செய்யலாம். ஆனால் பின் பக்கங்கள் கிழிந்து போன நாவல் கிடைத்தால் என்ன செய்ய? [பெரும்பாலும் நாவல்களில் கடைசிப் பக்கத்தில்தான் கதையின் முடிச்சு அவிழும்]
கொஞ்சம் ஆழமாக யோசித்தால், நம் மனித வாழ்க்கையும் முதல் மற்றும் கடைசிப் பக்கங்கள் கிழிந்து போன ஒரு அட்டையில்லாத புத்தகம் தானே? எங்கே இருந்து வந்தோம் என்பது தெரியாது. எங்கே போகப்போகிறோம், என்ன ஆகப் போகிறோம் என்பதும் தெரியாது.இருந்தாலும் 99% மக்கள் எந்தக் கவலையும் இல்லாமல் தின்று, கழிந்து, அடுத்தவன் முதுகில் முள்ளைக் குத்தி, அவன் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டுதிரிகிறது.
நாம் சென்ற பதிவில் சிற்றிதழ்கள் பற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இந்த சிற்றிதழ்களின் பங்கு மிக மிக முக்கியமானது.
எத்தனையோ புகழ்மிக்க எழுத்தாளர்கள், கவிஞர்கள் இந்த சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்துதான் பிற்காலத்தில் பெரிய ஆட்களாக ஆனார்கள். ஆனால் புகழ் வந்ததும் வெகுசனப் பத்திரிக்கைகளில் சேர்ந்துகொண்டு சிற்றிதழ்களைத் திரும்பிப்பார்க்காமல் அநாதையாக விட்டுவிட்டார்கள்.
இந்த மாதிரி சிற்றிதழ்களோட வளர்ச்சியைப் பார்த்துவிட்டு, வெகுஜனப் பத்திரிக்கைகள் கூட இலக்கிய இணைப்பு / தனி இதழ் வெளியிட ஆரம்பித்தார்கள். இந்தியா டுடே, கல்கி இதழ்கள் எல்லாம் தீபாவளி மலர் வெளியிடுவதெல்லாம் இப்படித்தான். குமுதம் இதழ் சார்பாக ‘தீராநதி’ என்ற பெயரில் ஒரு புத்தகம் 2002-ல இருந்து மாத இதழாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.
புதுக்கவிதை / கவிஞர்களை வளர்த்தெடுத்தது இந்த சிற்றிதழ்கள்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
இந்த சிற்றிதழ்களுக்கே உள்ள நோய் என்னவென்றால், சந்தா கிடைத்தால்தான் உயிர் வாழ முடியும். விளம்பரங்களுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதனாலேயே , பல இதழ்கள் ஆரம்பித்த ஓரிரண்டு ஆண்டுகளிலேயே நின்று போய் விடுகின்றன.
இன்னொரு காரணம், பெரும்பாலான சிற்றிதழ்கள் ஒன்று அல்லது இரண்டு எழுத்தாளர்களின் சுய முயற்சியில் வெளியாவதுதான். இது ஒரு நிறுவனமாக செயல்படாததால் , அந்தத் தனி மனிதர்களின் வாழ்க்கையில நிகழும் பல சம்பவங்கள் இதழ் வெளியீட்டை பாதிக்கின்றன.
சித்தூர் முருகேசன் அவர்கள் தனது கவிதை-07 வலைப்பதிவில் ‘நீங்களும் உங்க எதிரியும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதற்கான சுட்டி http://kavithai07.blogspot.in/2010/08/blog-post_1455.html. இந்தக் கட்டுரையில், புத்தகங்களின் தரம், எழுத்தாளர்களின் மனநிலை பற்றிய ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.
/–ஒரு குப்பை தொட்டி நிறைய புஸ்தவங்களை கிளறி புரட்டினா ஒரு பாக்கெட் டயரி ரொம்பினா சாஸ்தி. எழுதறவன்ல நிறைய பார்ட்டி தொடை நடுங்கிங்க. எஸ்கேப்பிஸ்டுங்க. கற்பனா வாதிங்க. வெறுமனே மூளையாலே சிந்திக்கிற பார்ட்டிங்க.–/
இது எவ்வளவு பெரிய உண்மை. இதை இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்ப்போம்.
புகழ் அடைந்துவிட்ட எழுத்தாளர்கள் எழுதுகிற எல்லாமே நல்ல எழுத்து என்று சொல்ல முடியாது. இது சினிமாவுக்கும் பொருந்தும். எம்ஜிஆர் , சிவாஜி நடித்த எல்லாப் படங்களுமே நல்ல படங்கள் என்று சொல்லி விட முடியாது. இருந்தாலும் இவர்கள் புகழ் அடைந்த பின்னால், இவர்களின் எல்லாப் படைப்புகளையும் நல்ல படைப்புகளாக நம்மை அறியாமலே ஏற்றுக் கொள்கிறோம்.
இவ்வாறு புகழ் அடைந்த எழுத்தாளர்களின் பின்னால் பதிப்பாளர்கள் ஓடுவதால் மற்ற புதிய எழுத்தாளர்கள் / படைப்பாளிகள் எல்லாம் அரசமரத்துக்கு அடியில் முளைத்த செடி போல வளர முடியாமல் காய்ந்து போகிறார்கள்.
எழுத்தாளன் என்றைக்குமே சமூகத்தை விட, குறைந்தது ஒரு தலைமுறையாவது தாண்டி முன்னோக்கி யோசிக்க வேண்டும். அப்போதுதான் அவனுடைய நல்ல கருத்துக்கள் உந்து சக்தியாக மாறி சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆனால் எழுதுபவனோ அல்லது மற்ற படைப்பாளியோ , எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்?

/–

எழுதறவன்ல நிறைய பார்ட்டி தொடை நடுங்கிங்க. எஸ்கேப்பிஸ்டுங்க.–/

‘எழுதறவன்’ என்பதை இன்னும் விரிவாக ஆக்கினால் எல்லாப் படைப்பாளிகளுக்கும் இந்த விமர்சனம் பொருந்தும். பல திரைப்படங்களில் முக்கோணக் காதல் கதை இருக்கும், அதில் ஒரு பெண்ணைக் கடைசியில் கொன்று விடுவார்கள். ஏன் எனில் பலதாரமணம் நடந்ததாகக் காட்டக் கூடாது என்ற எண்ணம். ஆனால் இருதாரம் உள்ளவன் ஊருக்கு இரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சில திரைப்படங்களில் விதவையைக் காட்டுவார்கள். அவளுக்குத் திரும்பவும் திருமணம் ஆவதற்கான வாய்ப்புக் கூடி வருவது போலக் காட்டி இறுதியில் ஏமாற்றுவார்கள். (எ.கா. வைதேகி காத்திருந்தாள்). ஆனால் இங்கே வேடிக்கைக்குரிய விஷயம் என்ன என்றால், விதவைத் திருமணம் நடப்பது போன்ற கதைகள் 1950-60க்கு முன்னாலேயே வந்து விட்டன. மக்களும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். பின்னால் வந்த தொடை நடுங்கிகள், படம் ஓடாமல் போய்விடுமோ என்று தாங்களாகவே கற்பனை செய்துகொண்டு, பழைமைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தத் திரைப்படத்திலாவது, சந்தர்ப்பவசத்தால் கெட்டுப்போன பெண் வாழ்ந்ததாகக் காட்டவே மாட்டார்கள். அவள் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டு செத்து போவாள். ஏன் அய்யா, கற்பழிக்கப்பட்டவள், கணவனால் கைவிடப்பட்டவள், ஏமாற்றப்பட்டு கர்ப்பமானவள் இவர்கள் எல்லாம் வாழக் கூடாதா? 99% சினிமாவில் இவர்கள் எல்லாம் செத்துப் போவதாகக் காட்டுவது ஏன்? அதுதான் எஸ்கேபிஸம்.
இந்த விஷயத்தில் திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது, கதை / நாவல் எழுதுகிற எழுத்தாளர்களுக்குச் சுதந்திரம் அதிகம். ஏன் எனில், அவர் முதல் போட்டு வியாபாரம் செய்யவில்லை. அவருடைய கதையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவருக்கு நஷ்டம் குறைவு.
இந்த சுதந்திரம் இருந்ததால்தான் தி.ஜா (தி.ஜானகிராமன்) தைரியமாக, ஒரு வேசியைக் கதாநாயகியாக வைத்து ‘மரப்பசு’ நாவலை எழுதி வெளியிட முடிந்தது. தைரியமாக “இத்தோட 300 பேருக்கு மேல ஆச்சு” என்று வசனம் பேச வைக்க முடிந்தது. இந்த நாவலில் எங்குமே விரசமோ, காமத்தைத் தூண்டுகிற விவரிப்புகளோ இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அதே நேரத்தில், வேசியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து விரசம் இல்லாமல் யாராவது திரைப்படம் எடுத்திருக்கிறார்களா? அந்த மாதிரி திரைப்படங்களில் எப்படிப்பட்ட காட்சிகள் வந்தன என்பதை நான் இங்கே சொல்ல வேண்டியதே இல்லை. வியாபார நோக்கில் உருவாக்கப்படும் எந்தப் படைப்பும் இப்படித்தான் உயிரற்று இருக்கும்.

[தொடரும்]

துடிமன்னன்