நூல்கள் நுகர்வோம் -7

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

  1. நூல்கள் நுகர்வோம்-1
  2. நூல்கள் நுகர்வோம்-2
  3. நூல்கள் நுகர்வோம்-3
  4. நூல்கள் நுகர்வோம்-4
  5. நூல்கள் நுகர்வோம்-5
  6. நூல்கள் நுகர்வோம்-6
ஒருநாள்   மழை பெய்து  ஓய்ந்த நேரத்தில்  நானும்   நம் நண்பர் ஒருவரும் வண்டியில் போய்க் கொண்டு இருந்தோம். அந்த வழியில் ஒரு மரக் கிடங்கு இருக்கிறது. பெரிய பெரிய மரங்களை அங்கே  இருப்பு வைத்திருப்பார்கள். ஒரு   பக்கத்தில் மரத்தைப் பிளந்துகொண்டு இருப்பார்கள். இன்னொரு புறத்தில் மரத்தை வண்டியில்   ஏற்றி அல்லது இறக்கிக் கொண்டு இருப்பார்கள்.
நாங்கள்   போன நேரத்தில்  40 வயதுள்ள ஒருவர் மரம் உடைத்துக் கொண்டு இருந்தார். வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்த நம்   நண்பர் , “அய்யோ, பாவம்.   இப்படிக் கஷ்டப்படுறாரே “  என்று   சொன்னார். நானும் , “ஆமா, கஷ்டந்தான்”  என்றேன்.
அந்த   நேரத்தில் நான் அப்படிச் சொன்னாலும், நான்   சொன்னது சரிதானா, உடலால்   வேலை செய்கிற ஒருவனைப் பார்த்துக் கஷ்டப்படுவதாக எண்ணும் எண்ணம்   சரிதானா  என்ற குழப்பம் வந்தது.
நீங்கள்   ஒரு பொதுவுடமைச் சார்பு / சிந்தனை உள்ள ஆளாக   இருந்தால், நிச்சயமாக  ‘அந்த ஆள் கஷ்டப்படுறான், அவன   சமுதாயம் சுரண்டுது ‘ என்று சொல்லி விடுவீர்கள்.   ஆனால் அதில் உண்மை இருக்கிறதா?
மேலோட்டமாகப்   பார்த்தால், நம் எண்ணம் சரி என்று தோன்றினாலும், கொஞ்சம்   ஆழமாக யோசித்தால் நம் எண்ணம் தவறு என்பது தெரிய வரும். இப்படிச் சொல்வதனால் என்னை   முதலாளித்துவ அடிவருடி என்றோ, பூர்ஷ்வா என்றோ சிலர் சொல்லலாம்.
உடல்   உழைப்பு எனக்கு ஒன்றும் புதியது கிடையாது. நான்   விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ஏர் ஓட்டுவது தவிர மீதி எல்லா விவசாய வேலைகளையும்   செய்திருக்கிறேன். பத்தாவது படிக்கும்போது கிணற்றில்  மண் அள்ளி இருக்கிறேன்.   (அப்போது 20 ரூபாய் சம்பளம் கிடைத்தது). கிணற்று   மண் ஈரமாக இருக்கும். அதை சுமப்பது எவ்வளவு கஷ்டம்  என்பது சுமந்தவர்களுக்குத்தான்  தெரியும்.
இந்த   வரலாறெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், நான்   இப்படியெல்லாம் உழைத்திருக்கிறேன் என்று பீற்றிக் கொள்வதற்காக அல்ல. உடல் உழைப்பைப்   பற்றிக் கருத்து சொல்வதற்கு எனக்குத்  தகுதி இருக்கிறது என்பதை உணர்த்தத்தான்.
நன்றாக   யோசித்துப் பார்த்தால், நம் உடம்பே, உடல்   உழைப்புக்கு ஏற்றவாறுதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொழிற்புரட்சி வந்து   எல்லாம் இயந்திரமயமாக ஆகிற வரைக்கும் (இந்தியாவில் 1970-75   வரைக்கும்) , கிராமத்தில்   எல்லோருமே  விவசாய வேலைகள் செய்து உடல் உழைப்பால்தான் வாழ்ந்துகொண்டு   இருந்தார்கள்.
15-20 ஏக்கர்   நிலம் இருக்கிற பண்ணையாராக இருந்தாலும், அவர்களின் மொத்த   குடும்பமும், மற்ற வேலைக்காரர்களோடு சேர்ந்து நிலத்தில் இறங்கி வேலை   செய்வார்கள்.   மத்திய தரக் குடும்பத்தில் சைக்கிள்   இருப்பதே லக்சரியாக இருந்த காலம் அது.  அப்போது யாராவது “அய்யோ, வெய்யில்ல   கஷ்டப்படுறமே”  என்று புலம்பியது   இல்லை.
அவ்வாறு   இருந்த நிலையில்  இந்த மனமாற்றம்  எப்படி – எப்போது ஏற்பட்டது?
எப்போது, பணம்   இருப்பவன் உடம்பை வளைத்து உழைக்கத் தேவையில்லை, படித்தவன்   குனிய நிமிரத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டதோ, அப்போதே   உழைப்பு  என்பது கேவலமானது, வேறு   வழி இல்லாத ஏழைகளுக்கானது  என்ற எண்ணம் வர   ஆரம்பித்தது. காட்டை விற்றாவது கார் வாங்கி  புகை விட்டுக்கொண்டு (அடுத்தவன்   மனதிலும்தான்) போக வேண்டும் என்ற எண்ணம் வலுவாக ஏற்பட்டு விட்டது.
வெய்யிலில்   போய்க் காட்டில் இறங்கி வேலை செய்வது கேவலம்   என்று  எல்லாரும் நினைக்க ஆரம்பித்தார்கள். சம்பளம்  குறைவாக இருந்தாலும்   பஸ் ஏறி நகரத்துக்குப் போய் சாயப்பட்டறையில் 10 மணி   நேரம் சந்தோஷமாக வேலை செய்துவிட்டு வந்த   நபர்களை நான் அறிவேன். ஏன் என்று கேட்டால் அதுதான் நாகரீகம் என்று பதில்   சொன்னார்கள்.
உடல்   உழைப்பு கேவலமானது, அதிலும், வெய்யில்   மழையில்  நின்று வேலை பார்ப்பது அதை விடக் கேவலமானது, விவசாயம்   பார்ப்பது மகாக் கேவலமானது  என்ற விஷக் கருத்து மிக வேகமாகப் பரவிவிட்டது. (முக்கியமாக 1980-க்குப் பின்னால்.)
நல்ல   வாய்ப்பு, தண்ணீர் வசதி இருந்த விவசாயிகூட, தன்   பிள்ளைகள் மண்ணில்  இறங்கிக் கஷ்டப்படக்கூடாது  என்று  சொல்லிச் சொல்லி  மூளைச் சலவை செய்து  ஃபைனான்ஸ் , ரியல் எஸ்டேட் என்று திருப்பி விட்டார்கள்.
கல்வி   அறிவை அதிகரிக்க வேண்டும்  என்ற அரசாங்கத்தின்  திட்டம்   இருமுனைக் கத்தியாக மாறி விட்டது. படித்தவர்கள் எல்லாம், தாங்கள்  சமுதாயத்தில்   “மேலே” வந்துவிட்டதாகவும்,    இனி  உடல் உழைப்பு செய்வது அசிங்கம் என்றும் எண்ணத் தலைப்பட்டனர்.
படித்த   ஏழையும் நகரத்தை நோக்கித்தான் ஓடுகிறான்.
 “படித்த”  என்று சொன்னால்  ஏதோ டிகிரி படித்தவன் என்ற அர்த்தம்  கிடையாது. 8-ஆவது   ஃபெயில் ஆகி இருந்தாலும், ‘சார்’ வெயிலுக்கு வரமாட்டார்.  நிழலில்தான் வேலை பார்ப்பார்.   அப்படி ஒரு வேலை  கிடைக்கவில்லை என்றான், ‘அப்பன்   ஆயி’ காசில், உட்கார்ந்து தின்று கொண்டு, ஏதாவது ஒரு   நடிகனுக்கு ரசிகர் மன்றம் வைத்துக்கொண்டுக் காலத்தை ஓட்டுவார்.
நம்  குழந்தைகள் படிக்கும் பாடத்திட்டமே விவசாயத்தை அங்கீகரிக்கவில்லை.   விவசாயம் ஒரு பாடமாக இல்லை. உயிரியல் பாடத்தில் வருகின்ற முக்கால்வாசித் தாவரங்கள்   இந்தியாவில்  கிடையாது. நாம்  தினமும் உண்ணும் தக்காளி, அரிசி, கத்தரிக்காய்   இதெல்லாம் எப்படி வளர்கிறது  என்று  பாடப்புத்தகத்தில் கிடையாது.
கேரளாவில்   “பணி கிட்டி”  என்றொரு சொற்றொடர் இருக்கிறது. ஏதாவது சிக்கல் உருவானால் , கொஞ்சம்   சிரமமான  நிலை ஏற்பட்டால்  இந்த வார்த்தையை உபயோகம்   செய்கிறார்கள். (எடுத்துக்காட்டாக, வண்டி ஓட்டிப்   போய்க்கொண்டு இருக்கும்போது  சாலையில் டைவர்சன்   போர்டு  வைத்து இருந்தால் – அதனால் வழி மாற்றிப் போக வேண்டி வந்தால் / பக்கத்து   சீட்காரன் விடுமுறையில் போய், அவனுடைய   வேலையை அவசரமாகச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்).
“ பணி கிட்டி”  என்ற   வார்த்தைக்கு நேரடி அர்த்தம் “வேலை   இருக்கு”/ “வேலை   வந்து விட்டது”. இந்த   வார்த்தைப் பிரயோகத்துக்குப் பின்னால் ஒரு   சமூகத்தின்  மனப்போக்கே  அடங்கி இருக்கிறது.
இதனால்   புரிய வேண்டியது என்னவென்றால்,  எப்போதெல்லாம் செய்வதற்கு   ஏதாவது வேலை இருக்கிறதோ, அப்போது நாம் சிரமத்தில் இருக்கிறோம் (!?). நோ   வெலை, நோ சிரமம். இதனால்தான் கென்யாவில்  கேக் கிடைக்கவில்லை என்று   ஸ்ட்ரைக்  செய்தால், அதற்கு ஆதரவாக  கேரளாவிலும்   ஸ்ட்ரைக் செய்கிறார்கள். முக்கியமாக வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைதான்   ஸ்ட்ரைக் நடக்கும். வியாழக்கிழமை அன்றைக்கு மதியத்தில்   இருந்தே சாராயக்கடையில் கூட்டம் தள்ளி   வழியும்.
‘நூல்கள் நுகர்வோம்’ தொடருக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன தொடர்பு  என்று நீங்கள் முனகுவது   கேட்கிறது.  தொடர்பு இருக்கிறது, அதை விளக்கமாகப் பார்ப்போம்.
பி.என்.மாறன்   என்ற எழுத்தாளர் பெ.நாயகி  என்ற புனை பெயரில்   நிறையக் கதைகள் எழுதி இருக்கிறார். அவருடைய சிறுகதைத்   தொகுதிகளில்  ஒன்று  “விதிக்கு ஒரு விதி”. இது   பாவை பளிகேஷன்ஸ் வெளியிட்ட நூல். இந்த நூலில்  20 சிறுகதைகள்   இருக்கின்றன.
இந்தத் தொகுப்பில்  9-ஆவது கதை, “அவங்க உழைப்பு   பூத்திருக்கு”.  அந்தக் கதையின் சுருக்கம் என்னவென்று பார்ப்போம்:
ஒரு   பண்ணையாரிடம் கூலிக்கு வேலை செய்கிற பெற்றோர். அவர்களுக்கு   மகனாகப் பிறந்து, படித்துப்   பதவிக்கு வந்தவன் மோகன். வேலை கிடைத்ததும், தன்   பெற்றோரைத் தன்னிடம்  வந்துவிடுமாறும்  இனி கூலிக்கு உழைக்க வேண்டாம், அந்தப்   பண்ணையாருக்கு அடிமைத் தொழில்   செய்யவேண்டாம் என்றும் சொல்கிறான். பெற்றோர் கேட்கவில்லை. இதுவரை பட்ட கஷ்டம்   போதும், இனிமேல்   கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை.
அப்போது   மோகனின் மேலாளர், மோகனின் எண்ணத்தில் தவறு இருக்கிறது என்பதையும், அதனால்தான்   அவர்கள் வர மறுக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறார். அந்த உரையாடலின்  ஒரு பகுதியைக் கீழே கொடுத்துள்ளேன்.
அவர்களைப்   பொறுத்தவரையில் ஒரு நோக்கத்தோடு உழைத்தார்கள். உனக்கு   எப்படி இந்த அலுவலகமோ அதே மாதிரி, அவங்களுக்கு   அந்தப் பண்னையார் வீடு. அவர்களுடைய உழைப்பின்   பலனை உன் முன்னேற்றத்தில் பார்த்திருக்கிறார்கள். இதுதான் அவர்களுக்குத்   தேவைப்பட்டதும். இந்தத் தேவை தீர்ந்ததில், அவர்களைப்   பொறுத்தவரையில் அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கை   வாழ்ந்திருக்கிறார்கள்.
அதே   சமயம் இது நிறைவேறக் காரணமாய் இருந்த பண்ணையார் மீது நன்றி   உணர்வும் இருந்திருக்கும். அவர்களிடம் போய், நீங்க   இது வரை வாழ்ந்த மோசமான வாழ்க்கை போதும்; என்   கூட வாங்க, வசந்தம் காட்டறேன்னு சொன்னா   அவங்களுடைய இத்தனை நாள் வாழ்க்கையைக் கேவலப்படுத்தியது   ஆகாதா?
வளர்ச்சிங்கறதுக்கு   அர்த்தம் முந்தைய நிலையைக் கேவலமா நினைக்கறது   அல்ல.
இந்தக் கதையில்   முத்தாய்ப்பாக இருப்பது  அந்த கடைசி வரிதான்.
ஏதோ   நாலு எழுத்துப் படித்து, ஒரு வேலை கிடைத்து , பேப்பர்   பேனாவுடன்  மேசையில் உட்கார்ந்து, கொஞ்சம் இரத்தம் ஊறிய  உடனே, “மரம் உடைக்கறவன் எல்லாம் ‘அய்யோ   பாவம்’, கோவணம்   கட்டிக்கிட்டு விவசாயம் பாக்கறவன் எல்லாம் ஒண்ணுக்கும் ஆகாத கேனப்பயல்”- என்று   நினைக்கும் மனப்போக்கு உள்ளவன் எல்லாம் இந்தக் கதையைக்   கட்டாயம் படிக்க வேண்டும்.
உழைப்பவன் மேல் பரிதாபப் படுவது போல் நாம் நடிக்கிறோம். அவனுடைய  உழைப்பை மதிக்காமல் கிண்டல் அடிக்கிறோம்,  நம்மை அறியாமலேயே அவனோடு   ஒப்பிட்டு  நம்முடைய ஈகோவை  நாமே   நக்கிக் கொடுத்துக் கொள்கிறோம்  என்பதுதான்   உண்மை.
நூல்   விவரம்:
தலைப்பு விதிக்கு  ஒரு விதி
எழுதியவர் பெ.நாயகி     (P.N. மாறன்)மேலும் அறிய: http://ta.wikipedia.org/s/tgq
பதிப்பகம் பாவை     பப்ளிகேஷன்ஸ்,142, ஜானி ஜான் கான் சாலை,இராயப்பேட்டை, சென்னை-600     014தொ.பேசி: 28482441,28482973
உரிமை பதிப்பகத்தார்
முதல்     பதிப்பு டிசம்பர்     – 2004
ISBN 81-7735-165-6
விலை 44/-     (நாற்பத்து நான்கு)
அணிந்துரை இல்லை
கிடைக்கும்     இடம் http://www.noolulagam.com/product/?pid=1114#details

தொடரும்..

துடிமன்னன்

Tagged: , , ,

2 thoughts on “நூல்கள் நுகர்வோம் -7

  1. […]  நூல்கள் நுகர்வோம்-7 […]

  2. […] நூல்கள்     நுகர்வோம்-7 […]

Leave a comment